பதிவு செய்த நாள்
15
டிச
2012
10:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நாளை(டிச.,16) முதல், ஜன.,13 வரை, எண்ணெய் காப்பு உற்சவம், திருப்பள்ளிஎழுச்சி பூஜைகள், கோ ரதம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. டிச., 27 ல், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இந்நாட்களில், கோயில் வெளிக்கோபுர கதவுகள், அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு, உச்சிக்கால பூஜை முடிந்து, மதியம் 12 மணிக்கு நடைசாத்தப்படும். மீண்டும், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு பல்லக்கு புறப்பாடாகி, இரவு 9 மணிக்குள் நடைசாத்தப்படும். எண்ணெய் காப்பு உற்சவம், டிச.,19 முதல் 28 வரை, நடக்கிறது. இந்நாட்களில், மாலை 6 மணிக்கு, மீனாட்சி அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி, தைலக்காப்பு மற்றும் தீபாராதனைக்கு பின், சித்திரை வீதிகளில் வலம் வருவார். டிச., 26 கோ ரதத்தில், அம்மன் எழுந்தருளி, ஆவணிமூல வீதிகளில் உலா வருவார். டிச., 27ல், கனகதண்டியலில் அம்மன் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வருவார். டிச., 28 திருவாதிரை அன்று, பொன்னூஞ்சல் மண்டபத்திலிருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும், ஆடி வீதியில் வலம் வருவர். டிச.,27 இரவு முதல் அதிகாலை வரை, ஆருத்ரா தரிசனம், அபிஷேகம் நடக்கும். டிச., 28 காலை 7 மணிக்கு, பஞ்ச சபை நடராஜர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் உலா வருவார். அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், தேன், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய், இதர அபிஷேகப் பொருட்களை, டிச., 27 மாலை முதல் கோயில் உள்துறை அலுவலகத்தில், பக்தர்கள் வழங்கலாம். ஜன.,5 அதிகாலை 5 மணிக்கு, அஷ்டமி சப்பரம் நடக்கிறது. டிச.,19 முதல் 28 வரை கோயில், உபயதாரர் சார்பில் உபய தங்கரத உலா, திருக்கல்யாணம் நடக்காது என, நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.