பதிவு செய்த நாள்
19
டிச
2012
11:12
மோகனூர்: மோகனூர், மாருதிநகரில் உள்ள ராஜநாகலட்சுமி கோவிலில், டிசம்பர், 23ம் தேதி ராகு, கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. மோகனூர் அடுத்த, ராசிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாருதி நகரில் பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ராகு, கேது பெயர்ச்சி விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு, டிசம்பர், 23ம் தேதி பெயர்ச்சி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ராகு விருச்சிகத்தில் இருந்து துலாமுக்கும், கேது ரிஷபத்தில் இருந்து மேஷத்துக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். இந்த பெயர்ச்சியில், மேஷம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். டிசம்பர், 22ம் தேதி காலை, 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, ராஜகணபதிக்கு அபிஷேக அலங்காரம், பரிவார சங்கல்ப பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை, 4 மணிக்கு விநாயகர் பூஜை, கேது மூல மந்திரம் நடக்கிறது. டிசம்பர், 23ம் தேதி காலை, 7.30 மணிக்கு, 27 நட்சத்திரங்கள் மந்திர ஜெப பாராயணம், காலை, 9 மணிக்கு ராகு, கேது பரிகார ஹோமம், ராஜநாகலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாத்தினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.