பதிவு செய்த நாள்
20
டிச
2012
10:12
உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உங்களுக்கு இவையாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும். நாளைக்காக கவலைப்படாதீர்கள். நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும், என்கிறார் இயேசுநாதர். ஏற்றத்தாழ்வுகளும், மேடுபள்ளங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை அனுபவ ரீதியாக அனைவரும் உணர்ந்தி ருப்பர். பிரச்னைகளை எதிர் கொள்ளும் மனோதிடமும், எதிர்ப்புகளை முறியடிக்கும் மனவலிமையும் பெற்றவர்களே முன்னேற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருப்பர். பின்தங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கவலைகளினால் தேவையற்ற கற்பனை கோட்டையை எழுப்பி அதற்குள் முடங்கியவர்களாக காட்சியளிப்பர்.
உணவுக்கும், உடைக்கும் கவலைப்பட்டு கண்ணீர் சிந்துபவர்களால் உயர்ந்த லட்சியங்களை கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் வாழ்வதற்கான உணவு, ஏதாவது ஒரு வழியில் இறைவனால் அருளப்படும். இதைத் தவிர்த்து எதிர்கால கவலைகளால் தங்களை வருத்திக் கொள்பவர்களும் உள்ளனர். அவர்களுக்காகத்தான் இயேசு கிறிஸ்து, இன்றைய பொழுதை இனிதாக்குங்கள். நாளைய பொழுது நல்லதாக துவங்கும், என்கிறார்.