பதிவு செய்த நாள்
20
டிச
2012
10:12
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், 23, 24ம் தேதிகளில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி தினத்தையொட்டி, சொர்க்கவாசல் தரிசனத்திற்கு வரும் பக்தகளின் வசதிக்காக, தேவஸ்தான நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது.திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் வரும், 23, 24ம் தேதிகளில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி தினத்தையொட்டி, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் தரிசனம் செய்ய வரும் ஏழை, நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வி.ஐ.பி., தரிசன முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.திருப்பதியில் இருந்து அலிபிரி வழியாக திருமலைக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, திவ்ய தரிசன டோக்கன், காளிகோபுரம் அருகே, 12 கவுன்டர்களில் வழங்கப்படும். ஸ்ரீவாரிமொட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு காளிகோபுரம் அருகே உள்ள, 8 கவுன்டர்களில் தரிசன டோக்கன் வழங்கப்படும்.
இவர்கள், 23ம் தேதி ஏகாதசி தினத்தன்று அதிகாலை, 4 மணிக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.வி.ஐ.பி., பக்தர்கள் அதிக அளவில் வரும்பட்சத்தில், பிரதான வாயில் வழியாக அனுமதிக்கப்படுவது ரத்து செய்யப்படும். 300 ரூபாய் டிக்கெட் வாங்கி உள்ள பக்தர்கள், 23ம் தேதி காலை, 8 மணிக்கு "லேபாட்சி எம்போரியம் எதிரே அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு தரிசன நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்படுவர்.வி.ஐ.பி., டிக்கெட்டுகள், 22ம் தேதி மாலை, 4 மணி வரை வழங்கப்படும். "பாஸ் மூலம் டிக்கெட் பெறுபவர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.பக்தர்களின் வசதிக்காக, மேற்கண்ட இருதினங்களிலும், மலைப் பாதை வழி, 24 மணி நேரமும் திறக்கப்பட்டு இருக்கும். இத்தகவல்களை, கோவிலின் துணை நிர்வாக அதிகாரி சீனிவா ராஜு தெரிவித்து உள்ளார்.