பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் தண்ணீர் கொட்டுவதால், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஒருவரும் இல்லை. கொடைக்கானல் வனப்பகுதியில் நீரோட்டம் நிலை சீராக உள்ளதால், கும்பக்கரை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கொடைக்கானல் வனக்கோட்டம், பெரியகுளம் வனச்சரகத்திற்கு உட்பட்டது கும்பக்கரைஅருவி. பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது. பருவமழை பொய்த்ததால் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதற்கு மாறுதலாக, ஆறுதல் தரும் வகையில் கும்பக்கரைஅருவியில் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் சபரிமலைக்கு சென்று விட்டு ஊருக்கும் திரும்பும் ஐயப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு குளிப்பதற்கு அதிகளவில் வருகின்றனர். வழக்கம் போல் யாரும் இல்லை: சென்னை, திருச்சி, திண்டுக்கல் பகுதியிலிருந்து அதிகளவில் ஐயப்பபக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர். அருவியில் கீழ் யானைகஜம் உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளுக்கு, சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். எந்த பகுதி ஆபத்தானது, என அவர்களுக்கு தெரியவில்லை. வனத்துறை அலுவலர் மற்றும் வடகரை போலீசார் ஒருவர் அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் இல்லை. ஆபத்தான பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை கூறவேண்டும்.