பதிவு செய்த நாள்
24
டிச
2012
10:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை, 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண பக்தர்கள் ரங்கா... ரங்கா... என பரவசத்துடன் முழங்க,பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து, திருக்கொட்டகையில் பிரவேசித்தார்.மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் காட்சி தந்தார்.பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 13ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல்பத்து உற்சவம் கடந்த, 14ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது. இன்று முதல், ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. முதல் நாளான இன்று அதிகாலை, 3:15 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. வழக்கத்தை விட ரங்கா ரங்கா கோஷம் குறைவாக ஒலித்தது.