கோத்தகிரி: படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா இன்று துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. ஹெத்தையம்மன் பக்தர்கள் இன்று காலை ஹெத்தையம்மன் கோவிலிலிருந்து செங்கோல் எடுத்து கலாசார உடையுடன் கிராமத்துக்கு சற்று தொலைவில் உள்ள மடிமனை என்னும் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு நாள்தோறும் கட்டிகை என்னும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. காணிக்கை செலுத்துதல், பஜனை, கலாசார நடனம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் முக்கிய திருவிழா நாளான 30ம் தேதி மீண்டும் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அம்மனை அழைத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், சின்னகுன்னூர், பெப்பேன், எப்பநாடு ஆகிய கிராமங்களில் திருவிழா நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து படுகர் இன மக்கள் உட்பட பிற சமூகத்தை சேர்ந்த மக்களும் அம்மனுக்கு காணிக்கை செலுத்த வழிபடுகின்றனர். இதன் ஒருபகுதியாக இன்று கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை நடக்கிறது. இதில், பல்வேறு கிராமங்களிலிருந்து ஹெத்தையம்மன் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அன்னதானம் நடக்கிறது. வரும் புதன்கிழமை பேரகணி மடிமனையில் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காத்துக்குளி மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் திருவிழா நடக்கிறது.