பதிவு செய்த நாள்
24
டிச
2012
12:12
கிறிஸ்துமஸ் நாள் டிசம்பர் 25 என கி.பி. 154ம் ஆண்டில் தான் போப் ஆண்டவர் ஜுலியசால் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. கிறிஸ்து + மாஸ் என்ற சொல்லில் இருந்தே கிறிஸ்துமஸ் என்ற சொல் பிறந்தது. இதற்கு கிறிஸ்துவின் ஆராதனை என்று பொருள்.
கிறிஸ்துமஸ் தாத்தாவின் கடைசி கிறிஸ்துமஸ்: புனித நிக்கோலஸ் என்பவர் முதன்முறையாக கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமிட்டார். இவர் ஒரு பிஷப் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 6ம் தேதி இவர் மரணமடைந்தார். கிறிஸ்துமஸ் வருவதற்கு 19 நாட்களுக்கு முன் மரணமடைந்ததால் குழந்தைகள் எல்லாம் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.
தொப்பியில் நட்சத்திரம்: நம் நாட்டில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் இயேசுவின் வருகையைக் குறிக்கும் வகையில் வானத்து நட்சத்திரங்களை அலங்கரித்து தொங்க விட்டிருப்பர். ஸ்வீடன் நாட்டிலோ இவ்வாறு செய்வதில்லை. அதற்குப் பதிலாக தொப்பிகளில் வெள்ளியால் செய்யப்பட்ட நட்சத்திரங்களை ஒட்டிக் கொண்டு செல்வார்கள். வெயிலிலும், விளக்கொளியிலும் அவை பளபளவென மின்னும்.
கிறிஸ்துமஸ் நாடகங்கள்: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் நாளன்று மாலையில், சர்ச்சுகளில் இயேசுவின் பிறப்பை விளக்கும் நாடகங்கள் நடத்தப்படும். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள். இதற்காகத் தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டு சிறந்த நடிகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் வாழ்த்து அட்டை: 1843ல் தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் ஆரம்பமானது. இங்கிலாந்தைச் சேர்ந்த கார்ஸலே என்பவர் முதல் கிறிஸ்துமஸ் அட்டையை தயாரித்தார். வாழ்த்து அட்டையைத் தன் நண்பர் சர் ஹென்றி ஹோலோவுக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து ராஜகுடும்பத்தினர், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு அனுப்பத் தொடங்கினர்.