பதிவு செய்த நாள்
24
டிச
2012
01:12
இந்துக்கள் கண்ணன் பிறந்தநாளின் போது உறியடி விழா நடத்துவது போல, மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் நாளில் பானைடியடி நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு பானையின் மீது சாத்தானை வரைந்து, அதனுள் பொம்மைகள், பண்டங்கள் நிரப்பப்படும். அதை உயரத்தில் கட்டித் தொங்கவிடுவர். மேலும் கீழுமாக அந்த பானையை இறக்க, சிறுவர்கள் அதனை தடியால் அடித்து நொறுக்குவர். உள்ளிருந்து பொம்மை மற்றும் இனிப்புகள் சிந்தும். சிறுவர்கள் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவர். சாத்தான் நமக்கு நன்மை செய்வது போல கவரப் பார்க்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசு: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கவிஞருக்கு அவரின் நண்பர் வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றை அனுப்பினார். அதுதான் சவப்பெட்டி. இப்படி அனுப்பியதற்காக அந்த நண்பர் வருத்தப்படவில்லை. அதைப் பயன்படுத்தி அதனுள் படுத்துக் கொண்டு எப்படி கவிதை எழுதலாம் என்பது பற்றி அமைதியாக சிந்திக்க ஆரம்பித்தார். பொதுவாக பணமாகவோ, பொருளாகவோ பத்திரிக்கைகளுக்கு சந்தாவாகவோ கிறிஸ்துமஸ் பரிசு அளிப்பது வழக்கம். இது மிகவும் வித்தியாசமான பரிசாக அந்த கவிஞருக்கு அமைந்தது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள இதழ் கவிஞரின் பெயரையும், பரிசளித்த நண்பரின் பெயரையும் ஏனோ வெளியிடவில்லை.
பனிமூட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ்: 1904ல், கிறிஸ்துமஸ் நாளன்று இங்கிலாந்து நாடு முழுவதையும் பனி மூடிவிட்டது. இந்த மூடுபனியால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அதேநேரம் அதற்கு பனி கிறிஸ்துமஸ் என்று செல்லப்பெயரும் வைத்தனர்.
போக்குவரத்து நிறுத்தம்: பின்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும். அந்நாட்டு மக்கள் தேவாலயங்களுக்குச் செல்ல சறுக்கு வண்டியைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வாகனங்களை செலுத்துவது வழக்கம். அவ்வாறு விதிகளை மீறும் வாகனங்களின் மீது போலீசார் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை ஒட்டி அனுப்புகிறார்கள்.