சபரிமலை: மண்டலபூஜைக்காக ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்கஅங்கி பவனி இன்று சன்னிதானம் வருகிறது. சபரிமலை நடை நாளை அடைக்க உள்ள நிலையில் கூட்டம் அதிகரிப்பால் நடை திறக்கும் நேரம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நாளை மண்டலபூஜை நடபெறுகிறது. இதற்காக கடந்த 22-ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்கஅங்கி பவனி இன்று பகல் ஒரு மணிக்கு பம்பையிலும், அதை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு சன்னிதானத்துக்கும் வந்து சேர்கிறது. மாலை 6.30 மணிக்கு தங்கஅங்கி ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிய நிலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. அதிகாலையில்,18-ம் படியேற பக்தர்களின் நீண்ட கியூ மரக்கூட்டத்தை தாண்டி காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை கியூவில் நிற்க வேண்டியிருந்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. கடந்த வாரத்தில் சில நாட்களில் கூட்டம் திடீர் என்று அதிகமானதால் காலையிலும், மாலையிலும் நான்கு மணிக்கு பதிலாக 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நேற்று, மீண்டும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நடைதிறக்கும் நேரம் காலையிலும், மாலையிலும் மூன்று மணியாக மாற்றப்பட்டது. நாளை மண்டலபூஜை 12.30 மணிக்கு நடைபெறும் என்று தந்திரி கண்டரரு ராஜீரரு கூறினார். இதனால் நெய்யபிஷேகம் காலை 11 மணியுடன் நிறுத்தப்படும் என்றும் அடுத்த நெய்யபிஷேகம் 31-ம் தேதி காலை 4.15 மணிக்கு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். நாளை இரவு பத்து மணிக்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.