பதிவு செய்த நாள்
25
டிச
2012
10:12
தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 421 கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், 1,000க்கு குறையாமலும், ஈரோடு மாவட்டத்தில், 1,300க்கும் மேற்பட்ட கோவில்களும் உள்ளன. அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில், தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, பூஜை பொருட்கள் விற்பனை செய்ய, அனுமதி வழங்கிஉள்ளதால், அரசுக்கு, கணிசமான வருவாய் கிடைக்கிறது. கோவில்களில் விற்பனை செய்யப்படும் போலி பூஜை பொருட்களால், பக்தர்கள், பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பக்தர்கள் கூறியதாவது: தமிழகத்தில், பெரும்பாலான கோவில்களில், அதிக ரசாயனம் கலந்த குங்குமம் விற்கப்படுகிறது. அதை நெற்றியில் வைத்தால், புண் ஏற்படுகிறது. திருமணமான பெண்கள், தலை வகிட்டில் பொட்டு வைத்தால், தலைமுடி கொட்டி, அங்கு முடி முளைப்பதில்லை. கோவில்களில் வழங்கப்படும் திருநீறில், சுண்ணாம்பு கலந்து கொடுப்பதால், திருநீறு பூசும் பக்தர்களுக்கு, நெற்றியில் அரிப்பு ஏற்படுகிறது. குண்டம் திருவிழா நடக்கும் கோவில்களில், குண்டத்தில், ஆண்டுதோறும் மிளகு, உப்பு தூவினால், பெண்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். மிளகு விலை உயர்ந்துள்ளதால், அதற்கு பதில், காய வைத்த பப்பாளி விதையே, மிளகாக வழங்கப்படுகிறது. கோவில்களில், பக்தர்கள் வைக்கும் அகல் விளக்கை, மீண்டும் சுத்தம் செய்து, அங்குள்ள கடைகளில் விற்பனை செய்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் எலுமிச்சை, வாழைப்பழம், தேங்காய், நெய், பால், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை, அருகே உள்ள கடைகளில் விற்று, சில கோவில் நிர்வாகங்கள் லாபம் பார்க்கின்றன. இது போல், பல மோசடிகள் கோவில்களில் நடக்கின்றன. அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, வியப்பாக இருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.