பதிவு செய்த நாள்
25
டிச
2012
10:12
நகரி: திருப்பதி, திருமலையில், வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி, வி.ஐ.பி.,க்கள் தரிசனம் செய்வதற்காக வழங்கப்பட்ட, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள், 5,000 ரூபாய்க்கு, மற்ற பக்தர்களுக்கு விற்கபட்டதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் எல்லாம், நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், திருப்பதியில், நேற்று முன் தினம் அதிகாலையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளை வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் தேவஸ்தானம் சார்பில், விற்கப்பட்டன.வி.ஐ.பி., அந்தஸ்து இல்லாத பக்தர்களுக்கும், இந்த, 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால், அந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்ட பலர், வி.ஐ.பி., தரிசனம் செய்ய விரும்பும் இதர பக்தர்களுக்கு, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளனர். வி.ஐ.பி.,க்களுக்கு, 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என, முதலில் அறிவித்த தேவஸ்தான அதிகாரிகள், 6,000 டிக்கெட்டுகள் வரை விநியோகம் செய்துள்ளனர். அதனால், அதிக எண்ணிக்கையில், டிக்கெட் பெற்றவர்கள், கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்துள்ளனர்.ஒரு வி.ஐ.பி.,க்கு, ஆறு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், பலருக்கு, 20 டிக்கெட்டுகள் வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.