நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீழைநாடுகளின் லூர்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு துவங்கிய சிறப்பு பாடல் திருப்பலி நேற்று அதிகாலை 1.30 மணி வரை நடந்தது. தேவாலய அதிபர் மைக்கேல், பங்கு பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்து கொண்ட பாடல் திருப்பலியில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசிர், உலக அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக அனைத்து அடிப்படை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.