பதிவு செய்த நாள்
26
டிச
2012
11:12
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பறவை, வேல்காவடி, பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு நகரில் பெரிய மாரியம்மன் கோவில் பண்டிக்கைக்கு அடுத்து, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பண்டிகை சிறப்புடையதாகும். இந்தாண்டு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பண்டிகை, டிசம்பர் 18ம் தேதி, கம்பம் நடும் விழாவுடன் துவங்கியது. நேற்று, வீரப்பன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், வைராபாளையம் காவிரி ஆற்றில் தீர்த்தம் கொண்டு வந்தனர். மேலும், பறவை காவடி, வேல் காவடி, பத்து செட் அலகு, பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழுவினர் சார்பில், பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை, மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பெண்கள் பொங்கல் வைத்தல் நடக்கிறது. நாளை, 27ம் தேதி, கோவிலில் கம்பம் பிடுங்குதல், பல்லக்கில் அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 28ம் தேதியன்று, மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.