பதிவு செய்த நாள்
27
டிச
2012
10:12
ஐதராபாத்: திருமலையில், வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களில், சொர்க்கவாசல் தரிசனம் கிடைக்காமல், குழந்தைகள் முதல் முதியோர் வரை, 60 ஆயிரம் பேர் அவதிக்கு உள்ளாயினர். திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், வி.ஐ.பி.,க்களுக்கு, அதிக பாஸ்களை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, விசாரணை நடத்த வேண்டுமென, தெலுங்கு தேசம் கட்சி கோரியுள்ளது.வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், வி.ஐ.பி.,களுக்கு முன்னுரிமை கொடுத்தது. மூன்று நாட்கள் வழங்கிய தரிசன டிக்கெட் வினியோகத்தில், பல குளறுபடிகள் நடந்துள்ளது. இதன் மீது, நீதி விசாரணை நடத்த வேண்டும் என, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, "மாஜி அமைச்சர்களான நகரி எம்.எல்.ஏ., முத்துகிருஷ்ணம நாயுடுவும், காளஹஸ்தி எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணா ரெட்டியும் மாநில அரசுக்கு, கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரும், ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்தை முன்னிட்டு, திருமலை தேவஸ்தான போர்டின் சேர்மன், நிர்வாக அதிகாரி மற்றும் அதிகாரிகள், ஆயிரக்கணக்கில் பாஸ்களை வழங்கினர். இதனால், ஏழை, நடுத்தர பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர்.சாமி தரிசனம் செய்வதற்கு, திருமலையில் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பலரும் சாமி தரிசனம் செய்யாமலே ஊருக்கு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.வசதி குறைவான ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்கள் திருமலையில் வெங்கடேச பெருமாளை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை, இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.