பதிவு செய்த நாள்
28
டிச
2012
10:12
திருநெல்வேலி: திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் இழுத்தனர் சிவதாண்டமாடிய ஐந்து சபைகளில், தாமிரசபை நெல்லையப்பர் கோயிலில் உள்ளது. இதில், தாமிரபரணி ஆற்றங்கரையில் ராஜவல்லிபுரத்தில் உள்ள அழகியகூத்தர் கோயிலில், தாமிரசபை சிறப்பு வாய்ந்தது. செப்பறைகளால் வேயப்பட்ட திருத்தலம் திருமால், அக்னிபகவான், அகத்தியர் மணப்படை வீடு மன்னருக்கு சிவபெருமான் நடனக் காட்சியளித்த சிறப்பு கொண்டது. உலகின் முதல் நடராஜ மூர்த்தி இங்கு எழுந்தருளியதாக கூறப்படுவதுண்டு. இத்தகைய புகழ் பெற்ற நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில், மார்கழி மாத திருவாதிரை திருவிழா கடந்த டிச.,19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. 9ம் நாளான நேற்று, அழகிய கூத்தர் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் இழுத்து தேரை நிலை சேர்த்தனர். இதே நாளில், சிதம்பரம் கோயிலிலும் தேரோட்டம் நடப்பது சிறப்புடையதாகும். இன்று (டிச.,28ல்) திருவாதிரை அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகமும், காலை 5.30 க்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், நண்பகல் 1.30 க்கு நடராஜர் திருநடன காட்சி, அழகிய கூத்தர் வீதி உலா வருதல், மாலையில் பஞ்சமுக அர்ச்சனை நடக்கிறது.