Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
மறைந்து வரும் பழமையான வரலாற்று ஓவியங்கள்!
டிசம்பர் 28,2012
அ-
+
Temple images

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், வரும் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, கோவில் சுவர்களில் உள்ள, 100 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் மீது, புதிதாக ஓவியங்கள் வரையப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து, 13 கி.மீ., தொலைவில் திருவையாறு உள்ளது. காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய, ஐந்து ஆறுகள் அமைந்துள்ளதால், இந்த ஊருக்கு ஐயாறு என, பெயர் வந்தது.இங்குள்ள, ஐயாறப்பர் என்ற பஞ்சநதீஸ்வரர் கோவில், உலக புகழ் பெற்றது. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர் கோன், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார் ஆகியோரால் பாடப்பட்டது.தியாக பிரும்மம் இந்த ஊரில் தான் வாழ்ந்தார். "தென் கயிலாயம் என, போற்றப்படும் இக்கோவில், தருமையாதீன நிர்வாகத்தில் உள்ளது.

திருப்பணி:ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், 1971ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடந்தது. தற்போது, 42 ஆண்டுகள் கழித்து, வரும் பிப்ரவரியில் கும்பாபி ஷேகம் நடக்க இருக்கிறது. இதனால், கடந்த பல மாதங்களாக திருப்பணி நடந்து வருகிறது. இக்கோவிலின், உள்பிரகாரத்தில் உள்ள திருச்சுற்று மாளிகையின் சுவர்களில், 100 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இருந்திருக்கின்றன. பல்வேறு புராண கதைகளை விளக்கும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. தற்போது நடக்கும் திருப்பணியில், இந்த ஓவியங்கள் மீது, அதே மாதிரி புதிதாக ஓவியங்கள் வரையப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்துதொல்லியல் ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:அந்த ஓவியங்களின் தற்போதைய அடுக்குக்கு கீழ் உள்ள பழைய அடுக்கு குறைந்தது, 100 ஆண்டுகளாவது பழமையானதாக இருக்க வேண்டும். அதன் பின், கடந்த காலங்களிலேயே அதன் மீது புதிய சுண்ணாம்பு அடுக்கு பூசப்பட்டு, புதிய ஓவியங்கள் வரையப்பட்டன. அதே நிகழ்வு தற்போதும் தொடர்வது வேதனைக்குரியது. தொல்லியல் சட்டப்படி, ஓவியங்கள் 100 ஆண்டுகளை தாண்டி விட்டால் அவை பழமையானவை என்ற பட்டியலில் சேர்ந்து விடும். அதேபோல், இதுவரை புதிதாக வரைந்து விட்ட ஓவியங்கள் தவிர, இருக்கும் பிற ஓவியங்களையாவது அப்படியே விட்டு விடலாம். இது போன்ற பழமையான ஓவியங்களை பாதுகாக்க, மத்திய அரசின், "கோவில் ஓவிய பாதுகாப்பு மையம் என்ற அமைப்பு உள்ளது. அவர்களிடம் ஆலோசனை கேட்டு இவற்றை பாதுகாக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கல்வெட்டுகள்:கடந்த 1894ம் ஆண்டு, இக்கோவிலில், நான்கு கல்வெட்டுகளும், 1918ம் ஆண்டு, 22கல்வெட்டுகளும், 1924ம் ஆண்டு ஒரு கல்வெட்டும், பிறகு நான்கு கல்வெட்டுகளுமாக, மொத்தம், 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், திருப்பணியை முன்னிட்டு, கல்வெட்டுகளின் மேலே சிமென்ட் பூசி வருகின்றனர். இதனால், கல்வெட்டு எழுத்துக்கள் அழிய வாய்ப்பிருக்கிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இந்த ஓவியங்கள் ஏற்கனவே, 1959ல் புதிதாக வரையப்பட்டவை தான். அதற்கு முன் என்ன இருந்தது என்பது எங்களுக்கு தெரியாது. ஓவியங்களின் கீழ் புறம், 1959ல் வரைந்த ஓவியரின் பெயர் மற்றும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.