பதிவு செய்த நாள்
29
டிச
2012
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், டிசம்பர் 28 ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜருக்கு தீப மை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நவம்பர், 18ம் தேதி துவங்கியது. 27ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்ற பயன்படுத்திய திரியில் இருந்து தயாரிக்கப்படும் தீப மை பிரசாதத்தை, ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜருக்கு சாத்தும் விழா, டிசம்பர் 28 நடந்தது. நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.பின், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்து தீப மை நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு சாத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, ஸ்வாமி வீதி உலா நடந்தது. அப்போது, பக்தர்கள் வழிநெடுகிலும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.