பதிவு செய்த நாள்
29
டிச
2012
11:12
சென்னிமலை: கொங்கு வேளாளர் இனத்தில், பெரிய குல கோத்திரத்தாரின் பெண் குழந்தைகளுக்கான பொன்னூஞ்சல் விழா, திருவாதிரை நாளில், டிசம்பர் 28 கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில், ரத்தின வேணாடுடையார் அரண்மனையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவாதிரை நாளில், பொன்னூஞ்சல் விழா நடக்கிறது. கொங்கு வேளாளர் இனத்தில், முதன்மையான குலமாக கருதப்படும், பெரிய குல கோத்திரத்தாரின் பெண் குழந்தைகளை, பொன்னூஞ்சல் ஆட்டும் சீர், தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது. சோழ மாமன்னர், இரண்டாவது கரிகாலர், தன் மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேரமன்னனை கருவூரில் அரியணை ஏற்றினார். கரிகாலனுக்கு படை உதவி செய்த, பெரியகுல தலைவன் வேணாடருக்கு நன்றி தெரிவிக்க மும்முடி பட்டம், வேணாடுடையார் பட்டம் கொடுத்து, தன் மகள் ஆடும் பொன் ஊஞ்சலை வேணாடருக்கு அளித்து, பொன்னூஞ்சல் ஆடும் உரிமையையும் தந்துள்ளார். சங்கரண்டாம்பாளையத்தில், அன்று முதல், மார்கழி திருவாதிரையில், மூன்று முதல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விழா நடக்கிறது. குல வழக்கப்படி, அரண்மனை முழுவதும் வாழை, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்தப்படும், சீர் செய்ய வ÷ண்டிய பெண் குழந்தை விரதம் இருந்து, அமராவதி ஆற்றில் நீராடுவர். அங்குள்ள ரத்தினமூர்த்தி கோவில், குலதெய்வத்தை வணங்கி, குழந்தையை மணப்பெண் போல் அலங்கரித்து, பட்டம்கட்டி, தாரை, தப்பட்டை, மேள தாளம் முழங்க, பெண்ணின் தாய்மாமன் தோளில் குழந்தையை தூக்கி வருவர்.அரமணையில், 35வது பட்டக்காரர் ஸ்ரீமான் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாடுடையார் முன்னிலையில், குலகுருவான திருக்கொற்றைத் திருவூராதீனம் சௌந்தரகாந்த ஜடாதர பரமேஸ்வர பண்டித குருசாமி ஆசி வழங்க, பெண் குழந்தையை ஊஞ்சலில் அமர வைத்து, புலவர்கள் பாடல்பாடி ஊஞ்சலை ஆட்டினர்.டிசம்பர் 28 நடந்த விழாவில், 68 பெண் குழந்தைகள் பொன்னூஞ்சல் விழாவில் பங்கேற்றனர். ஊஞ்சலாடிய குழந்தைகளுக்கு, தாய்மாமன்கள், வசதிக்கேற்ப சீர் செய்து மகிழ்ந்தனர். பின், விருந்து படைத்து, சீர் செய்த தாய்மாமனை, ஏழடி நடந்து வந்து ஊருக்கு வழியனுப்பினர். சோழன் கரிகாலன் உரிமையளித்த சீர் மரபினை இன்னும் இவர்கள் பெருமையாக கொண்டாடுகின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மங்களூர், ஊட்டி, பாலக்காடு, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, ஒட்டன்சத்திரம், ஈரோடு, சென்னிமலை, தாராபுரம் பகுதிகளில் இருந்து அதிக அளவில் விழாவுக்கு வந்திருந்தனர். ஏற்பாடுகளை, 32வது பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாடுடையார் தலைமையில் ரத்தினமூர்த்தி, ராமசாமி, வெங்கடாசலம், அருணாச்சலம் உட்பட பலர் செய்திருந்தனர்.