செய்துங்கநல்லூர்:தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பக்தர்கள் விரதம் இருந்து நடைபயணம் மற்றும் வாகனங்களில் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என அண்டை மாவட்டங்களையும் சேர்ந்த பக்தர்களும் நடைபயணமாக வந்து செல்கின்றனர். ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்தவரும் ஒரு குழுவாக சேர்ந்து நடந்து வருகின்றனர். இவர்களுக்கு நடைபயணத்தின் போது ஆங்காங்கே நேர்ச்சை செய்துள்ளவர்கள் இலவசமாக தண்ணீர் ஆகாரம், மற்றும் திட உணவையும் கொடுத்து வருகிறார்கள். நடந்துவரும் குழுவினரும் தங்களுக்கென்று வேன் மூலம் உணவு தயாரித்து கொண்டு வருகின்றனர். விரதம் இருந்து மாலை அணிவித்து திருச்செந்தூருக்கு நடந்து வரும் பக்தர்கள் தங்களை வருத்தி முகத்தில் அலகு குத்தி வருவது உண்டு. ஆனால் இறைவன் இயற்கையிலேயே ஊமையாக படைத்தவர்களும் இவர்களுடன் இணைந்து வருவது உண்டு. இரண்டு கால்களும் செயல்படாத நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தேவர்குளம் கிராம வாலிபர் கணேசன் 29 வருடமாக இப்பயணம் மேற்கொண்டுள்ளார். டிவி மெக்கானிக்கான இவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் இக்குழுவினருடன் வந்தது அனைவரையும் கவரச் செய்தது.