பதிவு செய்த நாள்
18
ஜன
2013
10:01
அவனியாபுரம்: தை முதல் நாளன்று வீடுகளிலும், மறுநாள் உழவுக்கு மரியாதை செய்யும் வகையில், உழவுக்கு பெரும் பங்காற்றும் மாடுகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுவது ஆண்டாண்டு காலமாக நடக்கிறது. ஆனால் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பொங்கல் வைப்பதை கேள்வி பட்டு, அவனியாபுரம் அருகே வலையங்குளம் சென்றோம். வீட்டு வாசலில் அழகான கோலம், நடுவில் அடுப்பிலிருந்த பானையில் பொங்கல் பொங்கிக் கொண்டிருந்தது. அருகில் வண்ண பிளாஸ்டிக் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையுடன்,நெற்றியில் அழகாக கும்ம பொட்டிட்டு, கோல்ட்டு ரெட்வேர் நாய் படுத்திருந்தது. பெண்கள் குலவையிட்டு, பொங்கல் வைத்து முடிந்து, நாயின் முன்பு இலை போட்டு, பொங்கல் படைத்து, தேங்காய் உடைத்து தீபாராதனை நடத்தி, நாய்க்கு சர்க்கரை பொங்கல் ஊட்டினர்.
நாய்க்கு ஏன் பொங்கல் கொண்டாடுகின்றீர்கள் என, அந்த நாயை வளர்க்கும் வி.எஸ்.தீனா என்ற பெண்ணிடம் கேட்டபோது, சட்டென்று கோபப்பட்டவர், சார் அதை நாய் என்று கூறாதீர்கள் டைகர் என கூறுங்கள் என்று கூறி, சற்று சமாதானம் அடைந்தவராய், நாய் வளர்க்க ரொம்ப ஆசை, ஆறுமாத குட்டியாக இருக்கும்போது, தந்தை வாங்கிக் கொடுதார். இப்போது மூன்று வயதாகிறது. எங்கள் குடும்பத்தில் ஒன்றாகி விட்டது. நான் பள்ளிக்கூடம் போகும்போது என் தலை மறையும்வரை கத்திக் கொண்டே இருக்கும். பள்ளி முடிந்து வந்தவுடன் அதை மடியில் படுக்க வைத்து சிறிது நேரம் கொஞ்சினால்தான் அமைதியாக இருக்கும். இல்லையென்றால் கத்தி ஊரைக்க கூப்பிட்டுவிடும். பால்சாதம் விரும்பி சாப்பிடும். பசி வந்துவிட்டால், அதோடு தட்டை எடுத்து வந்து எங்களிடம் காண்பிக்கும். தெரியாதவர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு தெரியாமல் எங்களிடம் வந்து முன்அறிவிப்பு சைககை செய்துவிடும். எனது தம்பி ஸ்ரீராமிடமும் மிகுந்த பாசத்துடன் பழகும். நாயை குளிப்பாட்டுவது எனது பெரியப்பா மகன் சம்பத். வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், டைகருக்காக யாராவது ஒருவர் வீட்டில் இருப்போம்.
எங்களைவிட பெற்றோருக்குத்தான் டைகரை பிடிக்கும். அந்தளவிற்கு எங்கள் குடும்பத்தில் ஒருத்தனாகிவிட்ட டைக்கருக்காக, மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் வைக்க வேண்டும் என எனது பெற்றோரிடம் கேட்டபோது, அவர்கள் உடனே சம்மதித்தனர். இதற்காக பொங்கல் அன்று எங்கள் வீட்டில் பொங்கல் வைக்காமல், மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் கொண்டாடுகிறோம். எங்களுடைய டைகருக்கு பொங்கல் வைக்கும் இன்றுதான் எனக்கு பொங்கல், அதுவும் மிக மிக மகிழ்ச்சியான பொங்கல். தீனாவில் தந்தை சிங்கராஜ் கூறுகையில், அதன் விலை ரூ. 40 ஆயிரம். அதை நாங்கள் ஒரு குழந்தையைபோல் வளர்க்கிறோம். அதை விட்டு ஒருநாள்கூட எங்களால் பிரியமுடியாது. அதுவும் எங்கள் குடும்பத்தின்மீது அளிவில்லா பாசம் கொண்டுள்ளது என்றார்.