பதிவு செய்த நாள்
19
ஜன
2013
12:01
கோடை, குளிர், வசந்தகாலங்களை வரவேற்பதில், கிராம மக்களை அடித்துக் கொள்ள முடியாது. நகரத்து திருவிழாக்கள், கிராமத்து விழாக்களின் பக்கத்தில் நிற்க முடியாது. கிராமங்களில் பாரம்பரியமாக அறுவடை நாளில் கால்நடைகளுக்கு, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தை மாதத்தில் பொங்கல் விழா நடக்கிறது. திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் மூன்று தலைமுறையாக கார்த்திகை மாதத்தில், சந்தி மறிச்சு பொங்கல் விழா நடத்துகின்றனர். மக்கள், கால்நடைகள் நோய், நொடியின்றி வாழ்வதற்காக இந்த ஏற்பாடாம். கார்த்திகை முதல் செவ்வாய் அன்று காளியம்மன், பகவதி அம்மன் கோயிலில் முதன்மைக்காரர்களால் பொங்கல் வைத்து, ஆண்களுக்கு மட்டும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
அன்று நள்ளிரவு 12 மணியளவில் கிடா வெட்டி, அம்மனுக்கு படைக்கின்றனர். இதைத் தொடர்ந்து 15 நாட்கள் வேப்பிலை தோரணங்கள் கட்டி விரதம் இருக்கின்றனர். பதினைந்தாம் நாள் அனைத்து சமுதாயத்தினரும், அவரவர் தெருவை மறித்து, பொங்கல் படைத்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். கிராமத்தினர் கூறுகையில், கார்த்திகை மாதத்தில் பருவநிலை மாற்றம் ஏற்படும். அதிகமாக பனி விழும். இதனால் மனிதர்கள், கால்நடைகளுக்கு நோய் வரும். கிராம தெய்வங்கள், எங்களை காக்க வேண்டும் என்பதற்காக மூன்று தலைமுறையாக வழிபாடு செய்கிறோம். தெருவை மறித்து பொங்கல் வைப்பதால், சந்தி மறிச்சு பொங்கல் பெயர் நின்றுவிட்டது, என்றனர்.