பதிவு செய்த நாள்
29
ஜன
2013
11:01
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜாகோயில் தைப்பெருந்திருவிழாவை யொட்டி தேரோட்டம்கோலாகலமாக நடந்தது. நாகராஜா கோயில் தைப்பெருந்திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி காலை திருக்கொடியேற்றம் நடந்தது. கொடியை தந்திரி நீலகண்டன்பட்டதிரி ஏற்றி வைத்தார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது.அன்றுமாலை சமய சொற்பொழிவு, இரவு இன்னிசை நிகழ்ச்சி, தொடர்ந்து புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடந்தது. நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.2ம் நாள் விழாவில் காலை சுவாமி புஷ்பக விமான வாகனத்தில் எழுந்தருளல், இரவு சுவாமி புஷ்பக விமான வாகனத்தில் எழுந்தருளல், மூன்றாம் நாள் சிறப்பு பூஜை, சமயசொற்பொழிவு, இரவு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி ஆகியன நடந்தது. 9ம் விழாவான நேற்று காலை 7.40 மணியளவில், தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தின் துவக்கமாக அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மணி ஆகியோரை கோயிலில் இருந்து கொண்டு வந்து தேரில் அமர வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், வெளிமாவட்டத்தில் இருந்தும் பெண்கள் உள்ளிட்ட எராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக சிறுவர்கள் அதிகம் பேர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.தேரானது நாகராஜா ரத வீதிகளில் வலம் வந்தது. புதிய தேர் பட்டு மற்றும் அலங்கார தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக ஆடி அசைந்து வந்தது. தேரின் மீது அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மலர் சொரியப்பட்டது. தேரில் இருந்தவாறு அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மணி சமேதராய் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சப்தாவர்ணம் நடந்தது. 10ம் திருவிழாவை யொட்டி, காலை சிறப்பு பூஜை, மாலை சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்னிசை, சிறப்பு நாதஸ்வர இசை விருந்து, ஆன்மீக சொற்பொழிவு, சோலாபியூசன் இசை விருந்து ஆகியன நடந்தது.