பதிவு செய்த நாள்
30
ஜன
2013
10:01
திருத்தணி: முருகன் கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் (சரவண பொய்கை) பச்சை நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் புனித நீராட முடியாமல் தவிக்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதந்தோறும் வரும் கிருத்திகை, ஆடிக்கிருத்திகை மற்றும் டிச., 31ம் தேதி நடைபெறும், படித் திருவிழா ஆகிய நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவர் முருகரை தரிசிக்கின்றனர். இதிலும், குறிப்பாக, ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாட்கள் நடக்கும் தெப்பத் திருவிழாவில், இரண்டு முதல் நான்கு லட்சம் பக்தர்கள் வரை காவடிகள் எடுத்து வந்து, மலையடி வாரத்தில் உள்ள திருக்குளத்தில் (சரவண பொய்கை) புனித நீராடி விட்டு, கோவிலுக்கு சென்று மூலவரை தரிசிப்பர். இப்படி புனிதமான திருக்குளத்தை, கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. மேலும் திருக்குளத்தில் சிலர் துணிகள் துவைப்பதால், திருக்குளத்தில் உள்ள தண்ணீர் மாசு படிந்து, பச்சை நிறமாக மாறி உள்ளது. தற்போது, தண்ணீர் முழுவதும் பச்சை நிறமாக மாறியும், பாசிகள் படர்ந்தும் உள்ளன. குளத்தில் உள்ள தண்ணீரும் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் புனித நீராட முடியாமல் அங்குள்ள, திருமண மண்டபம் மற்றும் தனியார் விடுதிகளில் பணம் கொடுத்து, குளிக்கின்றனர். காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் சிலர், பூமாலைகளை குளத்தில் வீசிவிட்டு செல்வதாலும், தண்ணீர் மாசுபடுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், குளத்தில் கால்களை கூட கழுவாமல் அப்படியே கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர். குளத்தில் உள்ள மாசு படிந்துள்ள தண்ணீரை வெளியேற்றி, புதிய தண்ணீர் விட வேண்டும் என, பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளனர். இதுகுறித்து கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், ""திருக்குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, அசுத்தமான தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.