பதிவு செய்த நாள்
08
பிப்
2013
12:02
புதுக்கோட்டை: ஆக்கிரமிப்பில் உள்ள, பலகோடி ரூபாய் மதிப்பிலான சிவன்கோவில் சொத்துகளை மீட்டுத்தர வேண்டும். தவறினால் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அகிலாண்டேஸ்வரி சமேத ஆனந்தேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள பழமை வாய்ந்த இக்கோவிலில், பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தடையின்றி நடக்கவேண்டும் என்பதற்காக, புதுக்கோட்டையை ஆண்ட மன்னர்கள், ஏராளமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை வழங்கியுள்ளனர். இவற்றை குத்தகைக்கு விட்டு, கிடைக்கின்ற வருமானத்தின் மூலம் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால், நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள், அவற்றில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நாளடைவில் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக மாறியது. இவ்வாறு பராமரிப்புகள் எதுவும் இன்றி அனாதையாக விடப்பட்ட தரிசு நிலங்கள் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இதை இந்து அறநிலையத் துறை கண்டுகொள்ளாததால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு வருவாய்த் துறையினர் உதவியுடன், போலி ஆவணங்களை தாக்கல் செய்து, அவரவர் பெயர்களில் பட்டாவும் வாங்கியுள்ளனர்.
இருந்தும் "சிவன் சொத்து குலநாசம் என்பதை உணர்ந்த ஆக்கிரமிப்பாளர்களில் சிலர், தங்கள்வசம் இருந்த கோவில் நிலங்களை, பிறருக்கு விற்பனையும் செய்துள்ளனர். இவ்வாறு கோவில் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கியவர்கள், அவற்றை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னரே கோவில் சொத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும், அந்த சொத்துகள், இரண்டு முதல், மூன்றுபேர் கைவசம் மாறியுள்ளதும் தெரியவந்தது. கோவில் சொத்து என்பதற்கான ஆவணங்களை சேகரித்த அக்கிராம மக்கள், இதன் நகல்களை, இந்து அறநிலையத்துறை மற்றும் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுத்தருமாறு கோரிக் கை வைத்தனர். இரு மாதங்கள் கடந்தும் நிலத்தை மீட்க, வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஏமாற்றமடைந்த அக்கிராம மக்கள் ,கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னரும் வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளாததால், தனிமையில் போராடி பயனில்லை என்பதை உணர்ந்துள்ள அக்கிராம மக்கள், "கறம்பக்குடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆனந்தேஸ்வரர் திருக்கோவில் சொத்து மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அரசியல் சார்பற்ற இந்த குழுவில், கறம்பக்குடி சுற்றுவட்டாரப் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள இளைஞர்கள், அரசுத்துறையினர், தொழிலதிபர்கள், திருப்பணி குழுவினர் என, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவின் முதல் கூட்டம் கறம்பக்குடியில் நேற்று நடந்தது. ஆனந்தராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், பெண்கள் உட்பட ஏராளமானபேர் பங்கேற்றனர். ஆக்கிமிப்பில் உள்ள கறம்பக்குடி சிவன் கோவில் சொத்துகளை முழுமையாக மீட்கும் விதமாக, தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதெனவும், இதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகம் முன்பு வரும், 20ம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவில் சொத்து மீட்பு நடவடிக்கை, கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.