பதிவு செய்த நாள்
08
பிப்
2013
12:02
சுரண்டை: சுரண்டை நல்ல அய்யனார் சாஸ்தா சுடலை மாடசாமி கோயிலில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுரண்டை சேனைத் தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நல்ல அய்யனார் சாஸ்தா, சுடலைமாடசாமி கோயிலில் நேற்று காலை சேனை விநாயகர், நல்ல அய்யனார் சாஸ்தா, பவனி அய்யனார், வன்னியர் ஆகிய தெய்வங்களுக்கும் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நல்ல அய்யனார் சாஸ்தா உற்சவர், பாலமுருகன், கொத்தாளி வீரபாகு, தவசிதம்பிரான், பரமசிவன், சப்தகன்னிகள், முண்டசாமி, சுடலை மாடசாமி, கள்வனை வென்றான், கருப்பசாமி, பேச்சியம்மன், பிரம்மசக்தி, புதியவன், பலவேசம் ஆகிய தெய்வங்களுக்கும் மற்றும் விமான கலசத்திற்கும் நூதன பிம்ப அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, கோமாதா பூஜை, 7.45க்கு ஸ்பரிசாகுதி, 8 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, கடம்புறப்படுதல், காலை 8.45க்கு விமான கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு நல்ல அய்யனார் சாஸ்தா மற்றும், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணிக்கு 5ம் கால யாகபூஜை, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், 12 மணிக்கு மகேஷ்வரபூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (8ம் தேதி) முதல் 41 நாட்களுக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நல்ல அய்யனார் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயில் கோமரத்தார்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.