புளியரை: புளியரை சதாசிவ மூர்த்தி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புளியரை சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோயிலில் ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. விழாவில் முதல் நான்கு தினங்கள் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தார். ஐந்தாம் நாள் அம்பாள் உலா வருதல் மாலை தவசு காட்சி நடந்தன. இரவு திருமாங்கல்ய தாரணம் நடந்தது. ஆறாம் நாள் சுவாமி அம்பாள் எழுந்தருளி உலா வருதல் நடந்தது. 7ம் நாள் சுவாமி அம்பாள் ஊஞ்சல் காட்சியும், எட்டாம் நாள் சிவகாமி அம்பாள், சதாசிவமூர்த்தி ஆராட்டு பல்லக்கில் எழுந்தருளலும் நடந்தது. ஒன்பதாம் நாள் சுத்திகலசம் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.