பதிவு செய்த நாள்
19
பிப்
2013
11:02
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவகுண்டம் அருகே வெள்ளுரில் இன்று (19ம்தேதி) மாசித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீவை., அருகே வெள்ளுர் ஸ்ரீநடுநக்கர் மத்திய பதீஸ்வரர் சிவகாசி அம்மாள் கோயில் மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்மாள் புஷ்பவிமானம், பூங்கோவில், புருஷாமிருகம், சிம்ம வாகனம், இந்திர வாகனம், யானை, அன்னம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும் 19ம் தேதி 9ம் திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமி பல்லக்கில் எழுந்தருளி திருத்தேர் நிலையம் வந்தடைந்து தீபாராதனை தொடர்ந்து தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. மாலையில் சந்தாவனம், தந்த பல்லக்கு தொடர்ந்து 20ம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை தீர்த்தவாரி மாலையில் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தலைமையில் கோயில் பணியாளர்கள் துரை மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்துள்ளனர்.