காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று காலை சூரியபிரபை உற்சவம் நடந்தது. இன்று, காலை காமாட்சியம்மன் மோகினி அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதிகளை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை விருஷபம் வாகனம், இரவு மான் வாகனம், 17ம் தேதி காலை மகரம், இரவு சந்திரபிரபை உற்சவம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை தங்க சிம்ம வாகனம், இரவு யானை வாகனம் உற்சவம் நடந்தது. நான்காம் நாளான நேற்று காலை சூரியபிரபை உற்சவம் நடந்தது. காலை உற்சவ காமாட்சி, அலங்கரிக்கப்பட்ட சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளை வலம் வந்தார்.இன்று காலை பல்லக்கு உற்சவம், இரவு நாக வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது. காலை பல்லக்கில் அம்மன் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.