பதிவு செய்த நாள்
20
பிப்
2013
11:02
அவிநாசி: திருமுருகன்பூண்டியில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நேற்று காலை 9.00 மணிக்கு துவங்கின. விநாயகர், சோமஸ்கந்தர், ஸ்ரீசண்முகநாதர், அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள், கொடிமரம் முன், எழுந்தருளினர். கோவில் சிவாச்சாரியார்கள், நான்கு வேதங்களையும் பாராயணம் செய்ய, திருமுறை, தேவாரம் இசைக்க, கொடியேற்றப்பட்டது. முன்னதாக, பிரகார உலாவாக, கொடி எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வரும் 25ம் தேதி உற்சவ மூர்த்திகள், தேர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்று மாலை 3.00 மணிக்கும், 26ம் தேதி மாலையும் தேரோட்டம் நடக்கிறது. கோவில் வரலாற்றில் தொடர்புடைய ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா வரும் 28ம் தேதி, நடராஜர் தரிசன காட்சி அடுத்த மாதம் முதல் தேதி நடக்கும். 2ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் இரவு 7.00 மணிக்கு கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சி நடைபெறும்.