பதிவு செய்த நாள்
21
பிப்
2013
10:02
மயிலாடுதுறை: சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று திறந்து வைத்தார். நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் பிறந்து, வாழ்ந்து, தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர் முத்துதாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோர். அவர்களது நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என, 20 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதையடுத்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே, 1.5 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்ட, தி.மு.க., ஆட்சியில் உத்தரவிடப்பட்டு, 2010ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழிசை மூவர்களின் ஐம்பொன் சிலைகள், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு சிலையும், 500 கிலோ எடையில், பீடம் உட்பட, ஆறே முக்கால் அடி உயரம் கொண்டது. இதன் மதிப்பு, 21 லட்சம் ரூபாய். மணிமண்டபம் முகப்பின் இரு பக்கங்களிலும், பெரிய அளவில் கற்களால் ஆன, இரண்டு யானைகள் உட்பட சிற்பங்கள் உள்ளன. மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டாக மூடிக் கிடந்தது. இந்நிலையில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று திறந்து வைத்தார். நாகை கலெக்டர் முனுசாமி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமையன் ஆகியோர், முதல்வருக்கு நன்றி தெரிவித்து, தமிழிசை மூவரின் சிறப்புகளை, விழாவில் எடுத்து கூறினர்.