பதிவு செய்த நாள்
21
பிப்
2013
10:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மொட்டை அடிப்போர் பக்தர்களிடம், கட்டாய வசூல் நடப்பதால், கோவிலுக்கு வருவோர் அவதிப்படுகின்றனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவில் புகழ்பெற்றது. இக்கோவிலுக்கு, காஞ்சிபுரம், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரார்த்தனையாக மொட்டை அடிக்கின்றனர். கிருத்திகை, சஷ்டி, விசாகம் போன்ற விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், மொட்டை அடிக்க வருவோர் எண்ணிக்கை அதிகம், ஆண்டுக்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கின்றனர். பக்தர்களுக்கு மொட்டையடிக்க, கோவில் நிர்வாகம் சார்பில், 20க்கும் மேற்பட்டோருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களிடம் மொட்டையடிக்க, கோவில் நிர்வாகம் சார்பில், 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொட்டை அடிக்கும் தொழிலாளிக்கு, ஒரு பிளேடு, 5 ரூபாய் பங்களிப்பு தொகை தரப்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக, தொழிலாளர்களுக்கு தரப்படும் பங்களிப்பு தொகை போதுமானதாக இல்லை. எனவே, அவர்கள் மொட்டையடிக்கும் பக்தர்களிடம், 50 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர். தர மறுக்கும் பக்தர்களை தரக்குறைவாக திட்டுகின்றனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண, கோவில் நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்து பேசி, கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.