பதிவு செய்த நாள்
22
பிப்
2013
10:02
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் மாசிமக உற்சவத்தில், பழமலைநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனி வருக்கு அருள்பாலித்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும் ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேசுவரர், விபசித்து முனிவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று, 6ம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 11:15 மணிக்கு பழமலைநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விநாயகர் மூஞ்சூரு வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை பழமலை நாதர் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர், விபசித்து முனிவர் ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.