பதிவு செய்த நாள்
22
பிப்
2013
02:02
மகாமகத்தன்று முறைப்படி தீர்த்தமாடினால், பிரம்மஹத்தி (கொலை) தோஷம், கோயில் சொத்தை கொள்ளையடித்த பாவம், குடித்துவிட்டு புரிந்த பாவங்கள், விஷ்ணு துரோகம்,. சிவ துரோகம், திருடிய பாவம், பல பெண்களை மனதில் நினைத்தது, தம்பதிகளை பிரித்த பாவம், குடும்பங்கடைள சிதைத்த பாவம் ஆகியவை நீங்கும்.
காசியிலே பிறந்தாலும்..: புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் தீரும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது. அதுவும் கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை வழிபடுவது மிகவும் உயர்ந்தது என்கிறோம். ஆனால், காசியில் பிறந்தவர்கள் கூட, தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒரு புனிதமான தலம் இருக்கிறதா என்றால் அது கும்பகோணம் என்று தமிழர்கள் பெருமைப்படலாம். கும்பகோணத்தில் பிறந்தாலே போதும். காசிக்கோ இதர புண்ணியத்தலங்களுக்கோ செல்லத் தேவையில்லை. கும்ப கோணேக்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதி என்ற ஸ்லோகம் இதை நிரூபிக்கிறது. ஏனெனில், உலகிலுள்ள அத்தனை புண்ணிய நதி தேவதைகளும், தங்களிடம் சேர்ந்த பாவத்தை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இங்குள்ள மகாமக குளத்தில் நீராடி தீர்க்க வருவதாக ஐதீகம். இந்த குளத்தில் மகாமகம் மட்டுமின்றி, ஒவ்வொரு மாசிமகத்திலும், இதர மாதங்களில் வரும் மக நட்சத்திர நாட்களிலும் நீராடி காசி செல்வதை விட உயர்ந்த புண்ணியத்தைப் பெறலாம்.
66 கோடி தீர்த்தம்: கும்பகோணம் மகாமக குளத்தை மாமாங்கக்குளம் என்றும் குறிப்பிடுவர். 20 ஏக்கர் பரப்பு கொண்ட இக்குளத்தின் வடகரை, தென்கரைகள் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளன. உயரத்திலிருந்து பார்த்தால் ஒரு குடத்தின் அமைப்பு தெரியும். குளத்தின் வடக்கில் நான்கும், மேற்கு, தெற்கில் மூன்றும், கிழக்கில் இரண்டும், நாற்கோணத்தில் ஒவ்வொன்றுமாக பதினாறு சிவலிங்கங்கள் உள்ளன. இதனை சோடஷ மகாலிங்கம் என்பர். சோடஷம் என்றால் பதினாறு. இக்குளத்தை, பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழிபடுங்கோயில் என்று சேக்கிழார் சிறப்பிக்கிறார். பூலோகத்தில் உள்ள 66 கோடி தீர்த்தங்களும் இந்த தீர்த்தத்தில் கலந்திருப்பதாக ஐதீகம்.
மங்களமும் மந்திரமும்: ஒருசமயம், உலகம் அழிந்த காலத்தில் வெள்ளத்தில் மிதந்த அமிர்த கலசத்தை உடைக்க வந்தார் சிவன். அவர், கும்பகோணத்தில் லிங்க உருவில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டதை அறிந்த பார்வதி அங்கு வந்தாள். மகாமக குளத்தில் நீராடினாள். அம்பிகையை தன் இடப்பாகத்தில் அமரும் படி அருள்புரிந்தார் சிவன். அவளுக்கு மங்களாம்பிகை என்ற பெயர் வந்தது. சக்திபீடங்களில் இது மங்களபீடம், மந்திரபீடம் என்று பெயர் பெறுகிறது. மங்களம் என்றால் ஆக்குவது. மந்திரம் என்றால் காப்பது. ஆக்குபவளும் அவளே, காப்பவளும் அவளே. இந்த அம்பிகையை மாசிமகத்தன்று வழிபட்டவர்க்கு எதையும் ஆக்கும் சக்தியும், ஆக்கியதைப் பாதுகாக்கும் திறனும் உண்டாகும்.
அரைமணிநேரத்தில் உலகையே வலம் வரலாம்!
கும்பகோணம் மகாமக குளத்தை ஒருமுறை சுற்றி வர உத்தேசமாக அரை மணி நேரமாகும். இந்தக்குளத்தை ஒருமுறை வலம் வந்தால், நூறுமுறை உலகத்தையே வலம் வந்த புண்ணியம் கிடைக்கும். இக்குளத்தில் நீராட வேண்டும் என்று மனதில் நினைத்தாலே போதும்! பாவங்கள் தீர்ந்து விடும். குழந்தையில்லாதவர்கள் மாசிமகத்தன்று நீராடினால் கும்பேஸ்வரர் அருளால் முருகனைப் போல் ஒரு மகன் பிறப்பான். சித்திரை, கார்த்திகை மாதங்களில் நீராடுவதும் சிறப்பு. மாசி மகத்தன்று வீட்டில் நீராடினாலும் கும்பகோணம் இருக்கும் திசை நோக்கி வணங்கியபின் நீராடினால், மகாமக குளத்தில் நீராடியபலன் கிடைக்கும்.
நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டுமா?
நன்மக்களைப் பெற, புதுமணத் தம்பதிகள் இவ்வாண்டுக்குள் ஒருநாளாவது கும்பகோணம் மகாமக தீர்த்தத்தை ஐந்துமுறை தலையில் தெளித்து, ஒன்பது ஏழை கன்னிப் பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்க வேண்டும். பிராமணர்களுக்கு பழங்கள் வழங்க வேண்டும்.