பதிவு செய்த நாள்
25
பிப்
2013
11:02
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் சுவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அரசு மரத்தை அகற்றிட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பெரிய மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. மாங்கல்யம் காக்கும் மாரியம்மன் என்ற சிறப்பு பெயர் கொண்ட பெரிய மாரியம்மனை வழிபட, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் குவிகின்றனர். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகை வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். பெரியமாரியம்மன் கோவில் நிலத்தை ஒரு தரப்பினர் ஆக்கிரமித்துள்ளதாக புகார் உள்ளதால், 60 ஆண்டுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்நிலையில், சி.எஸ்.ஐ., பள்ளி பின்புறம் உள்ள ராட்சத அரசமரத்தின் வேர், பெரியமாரியம்மன் கோவில் சுவருக்குள் புகுந்ததால், சுவர் இடிந்துள்ளது. எந்நேரமும் விழும் அபாயம் உள்ளதால், அரசமரத்தை அகற்றவும், சுவரை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்து அரசமரத்தை அகற்றுவதில் சிக்கல் இருந்ததால், சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், பெரியமாரியம்மன் கோவில் சுவரை பாதித்த அரசு மரத்தை வேருடன் அகற்ற நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி கூறியதாவது: பெரியமாரியம்மன் கோவிலில் மின்பராமரிப்பு, தளபராமரிப்பு, அலுவலக புதுப்பிப்பு ஆகிய பணிகள் அனைத்தும் முடிந்தது. சி.எஸ்.ஐ., பள்ளி மைதானத்தில் உள்ள அரசமரத்தால், பெரியமாரியம்மன் கோவில் சுவர் உடைந்தது. மரத்தை அகற்ற அதிகாரிகளுக்கு, கோரிக்கை விடுக்கப்பட்டது. ரெவின்யூ நிலத்தில் அரசமரம் உள்ளதால், அதிகாரிகளின் உத்தரவுக்காக, ஓராண்டாக காத்திருந்த நிலையில், மரத்தை வேருடன் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில், மரத்தை வேருடன் அகற்றி, இடிந்த சுவரை அகற்றி, ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிய சுவர் கட்டப்படும், என்றார்.