பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
கோவை: கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் வரும் 6ல் நடக்கிறது.கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்குவது கோனியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த பிப்., 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பிப்., 26ல் கொடியேற்றமும், அக்னி சாட்டும் நடந்தது. பிப்., 27 முதல் மார்ச் 3ம் தேதி வரை புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் கோனியம்மன் வீதியுலா நடந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு, வெள்ளை யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. நாளை இரவு 7.00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மறுநாள் (மார்ச் 6ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு நடக்கிறது. ராஜவீதி, தேர்நிலைத்திடலில், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கிறார்.வரும் 11ம் தேதி வரை நடக்கும் விழாவில், திருவிளக்கு வழிபாடு, பக்தி சொற்பொழிவுகள், அன்னதானம், இசை, நாட்டிய நகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.