பதிவு செய்த நாள்
05
மார்
2013
09:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பர்வதம் மண்டகப்படிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடு, மூன்று மணி நேரம் தாமதம் ஆகியதால், வேதனையடைந்த தொழிலாளிகள் வாக்குவாதம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், மாசி சிவராத்திரி விழாவையொட்டி நேற்று, கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் காலை 6 மணிக்கு மேல், வெள்ளி வாகனத்தில் புறப்பாடாகி, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்ல வேண்டும். இந்த வாகனத்தை தூக்கி செல்ல, சீர்பாதம் தூக்கும் தொழிலாளிகள் அதிகாலை முதல் காத்திருந்தனர். ஆனால், வாகனத்தில் சுவாமி, அம்மனை வைக்க, இரண்டரை மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனது. காத்திருந்த தொழிலாளிகள், கோயில் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுவாமி, அம்மனுக்கு பூஜை, அபிஷேகம் செய்ய தாமதம் ஆனதாக அதிகாரிகள் கூறி, தொழிலாளர்களை சமரசம் செய்தனர். காலை 8.50 மணிக்கு வெள்ளி வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளியவுடன், மண்டகப்படிக்கு புறப்பாடாகினர். ஆன்மிக வழிபாடு முறையை மாற்றி, குறித்த நேரத்தில், சுவாமி புறப்பாடு இல்லாததால், வழியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மண்டகப்படிக்கு, காலை 10 மணிக்கு செல்ல வேண்டிய சுவாமி, அம்மன் வாகனம், மதியம் 12.10 மணிக்கு சென்றதாக தொழிலாளிகள் தெரிவித்தனர்.