பதிவு செய்த நாள்
05
மார்
2013
10:03
திற்பரப்பு: திற்பரப்பு மகாதேவர் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்று விளக்குகளில் முதன் முறையாக தீபம் ஏற்றப்பட்டது. குமரி மாவட்டத்தில் பரசித்திபெற்ற பன்னிரு சிவாலயங்களில் மூன்றாவது கோயில் திற்பரப்பு மகாதேவர் கோயில். இது திற்பரப்பு அருவியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலின் மேற்கு பகுதியில் கோதையாறு நெளிந்து, தெளிந்து, பரந்து, விரிந்து ஓடுகிறது.மன்னர்கள் காலத்தில் மிகவும் பரமாண்டமாக அமைத்துள்ள இக்கோயிலின் சுற்றம்பலத்தின் வெளிப்புறத்தில் அழிமாடம் அமைத்து, அதில் மூன்று வரிசையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட இவ்விளக்குகள் பெரும்பாலும் சேதமடைந்து காணப்பட்டன. தற்போது புது விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.புது விளக்குகள் பொருத்த கோயில் பாதுகாப்புக்குழுவினர் தீர்மானித்தனர். இரும்பு விளக்குகளை அகற்றி, அழிமாடம் புதுப்பக்கப்பட்டு, பத்தளை விளக்குள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ஐந்து வரிசைகளில் 2 ஆயிரத்து 500 பத்தளை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கோயில் பாதுகாப்புக்குழு தலைவர் அனில்குமார் கூறியதாவது: பக்தர்கள் நன்கொடையாக நான்கு லட்சம் ரூபாய் மதிப்பல் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாகப் பொருத்தப்பட்ட விளக்குகளில் முதன் முறையாக தீபம் ஏற்றப்பட்டது. விசேஷ நாட்களிலும், பக்தர்கள் நேர்ச்சையாகவும் இவ்விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். இக்கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முக்கியமாகக் கருதப்பட்டு வந்தது. தற்போது கூடுதல் அழகாக, இந்த தீபம் காட்சியளிக்கிறது. இவ்வாறு அனில்குமார் கூறினார்.