பதிவு செய்த நாள்
19
மார்
2013
10:03
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் உள்ள சன்னதிகளில் "பாத்ரூம் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு இருப்பதை பார்த்து கோபம் அடைந்த இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் "பழமை மாறால் கோயிலை பாதுகாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் விதிமீறல் அதிகம் இருப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. கோயிலில் வியாபாரம் செய்ய ஏலம் எடுக்கும் வியாபாரிகள் பக்தர்களுக்கு இடையூறாக கோயிலை ஆக்கிரமித்து பல இடங்களில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் "கட்டாய வியாபாரம் செய்தல், "போலி வெள்ளியிலான உருவங்களை விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் விரிவான செய்திகள் படங்களுடன் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் சங்கரநாராயணசுவாமி கோயிலை சுமார் இரண்டரை மணிநேரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல சன்னதிகளில் "பாத்ரூம் டைல்ஸ்கள் ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்து கோபமடைந்ததுடன், கோயிலை பழமை மாறாமல் பாதுகாப்பதற்காக அறிவுரைகளை வழங்கினார்.
இதுதொடர்பாக ஆணையர் தனபால் நிருபர்களிடம் கூறும் போது, ""சங்கரநாராயணசுவாமி கோயில் பழமையும், வரலாறும் உடையது. கோயிலில் விதியை மீறி பல இடங்களில் புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. புதிதாக கட்டுமான பணிகள் நடக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பாத்ரூம்களில் பயன்படுத்தப்படும் "டைல்ஸ்கள் சன்னதிகளில் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதுமிகப் பெரிய தவறு. சன்னதிகளில் உள்ள டைல்ஸ்கள் அகற்றப்பட்டு மெருகேற்றப்படாத கிரானைட் கற்கள் பதிக்க திட்ட மதிப்பீடுகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் துவங்கும். நாகசுனையை அசுத்தம் செய்யும் பொரி ஏலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயில் நுழைவு வாயிலில் ஒரே இடத்தில் நெய் விளக்கு, பிரசாத ஸ்டால்கள் அமைக்கப்படும். கோயில் நிர்வாகத்தை மிரட்டும் வகையில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ஏலம் எடுக்க மறுத்தால் கோயில் நிர்வாகமே நெய் விளக்கு, பிரசாத ஸ்டால்களை நடத்தும். அதற்காக கார்ப்பரேட் அந்தஸ்தில் கடைகள் அமைக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் "போலி வெள்ளி உருவங்களால் ஏமாற்றப்படாமல் இருக்க குருவாயூர் கோயிலில் உள்ள நடைமுறை ஒரு மாத காலத்திற்குள் பின்பற்றப்படும். கோயிலில் வைக்கப்பட்டு இருக்கும் டிஜிட்டல் போர்டுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு "ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன போர்டுகள் வைக்கப்படும். காலணி பாதுகாப்பு மையம் நவீனப்படுத்தப்படும். கோயில் முன் மண்டபத்தில் பக்தர்களுக்கு இடையூறாக கடை நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மீறி விற்பனை செய்பவர்கள் மீது போலீசில் புகார் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சன்னதி பிரகாரங்களிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு எப்போதும் வெளிச்சமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகசுனை குளம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டு, குளத்தை சுற்றிலும் "ஸ்டெயின்லெஸ் கம்பி அமைக்கப்படும். வாடகை பாக்கி உள்ளவர்கள் குறித்த விபரம் போட்டோவுடன் அறிவிப்பு பலகையில் அறிவிப்பு செய்யப்படும். முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பெண்கள் குளிப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் வசதியாக அறை ஏற்படுத்தப்படும். பூக்கடைகள் நந்தவனத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சன்னதிகளில் உள்ள சாமி சிலைகளுக்கு தினசரி வஸ்திரம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆணையர் தனபால் கூறினார். நெல்லை மண்டல இணை ஆணையர் அன்புமணி, சுசீந்திரம் இணை ஆணையர் ஞானசேகரன், சங்கரன்கோவில் துணை ஆணையர் பொன்சாமிநாதன், மதுரை மண்டல செயற் பொறியாளர் கணேசன், நெல்லை உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்லத்துரை, ஆய்வாளர் ரோகிணி, உள்துறை ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.