பதிவு செய்த நாள்
21
மார்
2013
10:03
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீரை வெளியேற்றிய கவுன்சிலர், தற்போது வரை தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்காததால், 29ம் தேதி தெப்போற்சவம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது. வரும், 27ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. 29ம் தேதி, 300 ஆண்டிற்கு மேல் பராம்பரியமாக நடக்கும் தெப்போற்சவம், சந்திரசூடேஸ்வர் கோவிலுக்கு சொந்தமான தேர்ப்பேட்டை தெப்பக்குளத்தில் நடக்கிறது. இந்த தெப்போற்சவத்தில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த, 10 மாதம் முன், தெப்பக்குளத்தில் சாக்கடை நீர் கலந்து, சுகாதார சீர்கேடு அடைந்து தூர்நாற்றம் வீசியது. அப்பகுதி கவுன்சிலர் ரோஜா பாண்டியன், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தெப்பக்குளத்தை தூர்வாரி மீண்டும் தண்ணீர் விட்டு குளத்தை நிரப்புவதாக, ஹிந்து அறநிலையத்துறையில் அனுமதி பெற்று, குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றினார். அதன்பின், உள்ளூர் பிரச்சனையை காரணம் காட்டி, குளத்தை தூர்வாரவும், தண்ணீர் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தேர்த்திருவிழா நெருங்கி விட்டநிலையில், ஓசூரில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு, மின்சார பற்றாக்குறையால் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப முடியவில்லை.
தேர்த்திருவிழா இன்று துவங்கும் நிலையில் வெளிமாநில, மாவட்ட மக்கள் ஓசூரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் குவிந்து வருகின்றனர். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், இந்த ஆண்டு பராம்பரியமாக நடக்கும் தெப்போற்சவம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அதிருப்தியடைந்த கோவில் பக்தர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் முன்னாள் நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன், பா.ஜனதா கவுன்சிலர் நாகராஜ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வரதராஜ் ஆகியோர் தலைமையில் ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், சப்-கலெக்டர் பிரவீன் நாயரிடம், தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவில் கூறியுள்ளதாவது: சந்திரசூடேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. தேர்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தி, குளத்தில் நீராடுவர். வெளிமாநில பக்தர்கள், இந்த தெப்பக்குளத்தில் நீராடுவதை புண்ணியமாக கருதுகின்றனர். குளத்தின் அருகே கெலவரப்பள்ளி அணை நீர் குழாய் செல்கிறது. அந்த குழாயை திறந்தோ அல்லது தண்ணீர் லாரிகள் மூலமோ குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.