Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கலித்தொகை (பகுதி-1) கலித்தொகை (பகுதி-4)
முதல் பக்கம் » கலித்தொகை
கலித்தொகை (பகுதி-2)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
04:03

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 51

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு, அன்னை,
அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
அன்னாய்! இவனொருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
உண்ணு நீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15
செய்தான், அக் கள்வன் மகன்.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 52

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,
மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண், 5
கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்:
தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை,
நேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின்,
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
அணங்கு என அஞ்சுவர், சிறுகுடியோரே; 10
ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை,
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின்,
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,
களிறு என ஆர்ப்பவர், ஏனல் காவலரே
ஆர மார்பினை, அண்ணலை, அளியை, 15
ஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின்,
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே
என ஆங்கு
விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள்; இவள் அன்றி, 20
புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்;
அதனால், பொதி அவிழ் வைகறை வந்து, நீ குறை கூறி,
வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்கு,
புதுவை போலும் நின் வரவும், இவள்
வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல், யானே. 25

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 53

வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல்
விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா,
மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான்,
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல,
உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன, 5
அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!
மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்தபின்,
இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன்
அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்; 10
கயல் உமிழ் நீர் போல, கண் பனி கலுழாக்கால்;
இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின்,
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்மன்
ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி, நறு நுதல்
பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்; 15
அஞ்சல் என்று அகன்று, நீ அருளாது துறத்தலின்,
நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன்
நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவுற்று, கங்குலும் அரற்றாக்கால்;
என ஆங்கு, 20
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை
முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை
தளி பெறத் தகைபெற்றாங்கு, நின்
அளி பெற நந்தும், இவள் ஆய் நுதற் கவினே

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 54

கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற,
பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை,
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்!
அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு? என்ன,
நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி, 5
பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை,
நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்;
நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரற் போது கொண்டு,
செறாஅச் செங் கண் புதைய வைத்து, 10
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;
தொய்யில் இள முலை இனிய தைவந்து,
தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்
அதனால், 15
அல்லல் களைந்தனன், தோழி! நம் நகர்
அருங் கடி நீவாமை கூறின், நன்று என
நின்னொடு சூழ்வல், தோழி! நயம் புரிந்து,
இன்னது செய்தாள் இவள் என,
மன்னா உலகத்து மன்னுவது புரைமே. 20

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 55

மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலேபோல்,
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு,
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை,
இன் நகை, இலங்கு எயிற்று, தேம் மொழி துவர்ச் செவ் வாய்,
நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி: 5
நில் என நிறுத்தான்; நிறுத்தே வந்து,
நுதலும் முகனும், தோளும், கண்ணும்,
இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ,
ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று;
மை தீர்ந்தன்று, மதியும் அன்று; 10
வேய் அமன்றன்று, மலையும் அன்று;
பூ அமன்றன்று, சுனையும் அன்று;
மெல்ல இயலும், மயிலும் அன்று;
சொல்லத் தளரும், கிளியும் அன்று
என ஆங்கு, 15
அனையன பல பாராட்டி, பையென,
வலைவர் போல, சோர் பதன் ஒற்றி,
புலையர் போல, புன்கண் நோக்கி,
தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்;
காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன் 20
தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை
ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 56

ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால்,
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு,
கழும முடித்து, கண் கூடு கூழை
சுவன்மிசைத் தாதொடு தாழ, அகல் மதி
தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து, 5
ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல் வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார்,
கடிது, இவளைக் காவார் விடுதல் கொடி இயல், 10
பல் கலை, சில் பூங் கலிங்கத்தள் ஈங்கு, இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்!
இவளைச் சொல்லாடிக் காண்பேன், தகைத்து
நல்லாய்! கேள்:
ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை என, 15
தூது உண் அம் புறவு என, துதைந்த நின் எழில் நலம்
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! நிற் கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?
நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என,
முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் 20
வணங்கு இறை, வால் எயிற்று, அம் நல்லாய்! நிற் கண்டார்க்கு
அணங்காகும் என்பதை அறிதியோ? அறியாயோ?
முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என,
பெயல் துளி முகிழ் என, பெருத்த நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! நிற் கண்டார் 25
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?
என ஆங்கு,
பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்,
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய்! கேள், இனி:
நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடைப் 30
போதர விட்ட நுமரும், தவறு இலர்;
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு,
பறை அறைந்தல்லது செல்லற்க! என்னா
இறையே தவறு உடையான்.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 57

வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,
மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப,
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, 5
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள், இனி:
பூந் தண் தார், புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல்,
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்,
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின், 10
சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? சின்மொழி!
பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்,
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை,
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? கனங்குழாய்! 15
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின்மேல்,
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்!
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ? காழ் கொண்ட இள முலை
என ஆங்கு, 20
இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி,
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 58

வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள்,
பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின்,
கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல்,
கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்!
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை, 5
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்:
உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக,
இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம்
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்; 10
நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;
அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்காகி அடரும் நோய் 15
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்,
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;
என ஆங்கு
ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான்; மற்று இந் நோய் 20
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்!
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 59

தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி,
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர், அரி, முன்கை,
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் 5
விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால
என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி:
மருளி, யான் மருள் உற,  இவன் உற்றது எவன்? என்னும் 10
அருள் இலை இவட்கு என அயலார் நிற் பழிக்குங்கால்,
வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?
உருளிழாய்!  ஒளி வாட, இவன் உள் நோய் யாது? என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நிற் பழிக்குங்கால், 15
பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?
ஆய்தொடி!  ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது? என்னும்
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்குங்கால்,
சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ 20
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?
என ஆங்கு,
அனையவை உளையவும், யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாயாயின், சேயிழாய்!
செய்ததன் பயம் பற்று விடாது; 25
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 60

சுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல்,
மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல்,
நுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல்,
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!
கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு 5
உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று, புனையிழாய்! எனக் கூறி தொழூஉம்; தொழுதே,
கண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்!
என் செய்தான் கொல்லோ இஃது ஒத்தன் தன்கண்
பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள் 10
உருகுவான் போலும், உடைந்து;
தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ,
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின்மேல் கொள்வது; எவன்?
அலர்முலை ஆய்இழை நல்லாய்! கதுமென, 15
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்;
மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ!
நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்;
நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே 20
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்!
என் செய்வாம்கொல், இனி நாம்?
பொன் செய்வாம்,
ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம், 25
தேறல், எளிது என்பாம் நாம்
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம், மற்று;
சிறிது, ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என,
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி
பூண் ஆகம் நோக்கி இமையான், நயந்து, நம் 30
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,
நாண் அடப் பெயர்த்த நயவரவு இன்றே.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 61

எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்:
செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர்
அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று,
சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், 5
மெல்ல இறைஞ்சும் தலை;
எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்!
என், நீ பெறாதது? ஈது என்?
சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்? 10
செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின்,
சாதலும் கூடுமாம் மற்று
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்;
யாது, நீ வேண்டியது?
பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ 15
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல், யான்
அன்னையோ? மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?
ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன் 20
ஆயின், ஏஎ!
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல்
நல்காள் கண்மாறிவிடின் எனச் செல்வானாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக் 25
கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 62

ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்
மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5
புல் இனிது ஆகலின், புல்லினென் எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?
சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10
உண்பவோ, நீர் உண்பவர்?
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று; 15
அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 63

நோக்குங்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்
தூக்கு இலி; தூற்றும் பழி எனக் கை கவித்துப்
போக்குங்கால், போக்கு நினைந்து இருக்கும்; மற்று நாம்
காக்கும் இடம் அன்று, இனி
எல்லா! எவன் செய்வாம்? 5
பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல்
கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; ஈங்கு ஆக
இருந்தாயோ? என்று ஆங்கு இற;
அவன் நின் திருந்துஅடிமேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும் 10
மருந்து நீ ஆகுதலான்;
இன்னும், கடம் பூண்டு, ஒருகால் நீ வந்தை; உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு
இஃதோ? அடங்கக் கேள்:
நின்னொடு சூழுங்கால், நீயும் நிலம் கிளையா, 15
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன்
தன்னொடு நின்று விடு.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 64

அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும்,
மணி முகம், மா மழை, நின் பின், ஒப்ப, பின்னின்கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,
அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும் 5
விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப்
பெரும் பொன் படுகுவை பண்டு
ஏஎ, எல்லா! மொழிவது கண்டை, இஃது ஒத்தன்; தொய்யில்
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்;
உழுவது உடையமோ, யாம்; 10
உழுதாய்
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இஃதோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த 15
குவளையும், நின் உழவு அன்றோ? இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல,
என் உழுவாய் நீ, மற்று இனி
எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு;
முற்று எழில் நீல மலர் என உற்ற, 20
இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம்,
பெரும் பொன் உண்டு என்பாய்! இனி
நல்லாய்! இகுளை! கேள்:
ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின்,
வேந்து கொண்டன்ன பல; 25
ஆங்கு ஆக! அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ,
முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம்
உத்தி எறிந்துவிடற்கு 30

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 65

திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல்,
அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ, நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக 5
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,
தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே,
பாரா, குறழா, பணியா, பொழுது அன்றி, 10
யார், இவண் நின்றீர்? எனக் கூறி, பையென,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
தையால்! தம்பலம் தின்றியோ? என்று, தன்
பக்கு அழித்து, கொண்டீ எனத் தரலும் யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி, 15
கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ மற்று யான்
ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, 20
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,
ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ், கடுங்கண்,
இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டற்றால்! காதலன் 25
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து.

மருதன் இளநாகனார் அருளிய மருதக் கலி
கலித்தொகை - மருதக் கலி 66

வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான்,
வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர் 5
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை
பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனல் அணி நல் ஊர!
அணை மென் தோள் யாம் வாட, அமர் துணைப் புணர்ந்து நீ,
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ 10
பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை;
கனலும் நோய்த் தலையும், நீ கனங் குழையவரொடு
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ
தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின் 15
ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை;
தணந்ததன் தலையும், நீ தளரியலவரொடு
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை; 20
என ஆங்கு,
அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோ ர் திறத்து விரும்பிய நின் பாகனும்,
நீட்டித்தாய் என்று, கடாஅம், கடுந் திண் தேர்;
பூட்டு விடாஅ நிறுத்து. 25

கலித்தொகை - மருதக் கலி 67

கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம்
தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன்
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்; 5
நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா!
புலப்பேன் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;
கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி, 10
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா!
ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,
நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா! 15
துனிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே 20
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு.

கலித்தொகை - மருதக் கலி 68

பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! 5
ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு என்ன, உடன், வாளாது,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி,
களையா நின் குறி, வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின்வாய் விடன் மாலை மகளிரை நோவேமோ
கேள் அலன், நமக்கு அவன்; குறுகன்மின் என, மற்று எம் 10
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்;
ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர்வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்; 15
சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்,
பொலிக எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்;
என ஆங்கு 20
நனவினான் வேறாகும் வேளா முயக்கம்
மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட,
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்கு,
கனவினான் எய்திய செல்வத்து அனையதே
ஐய எமக்கு நின் மார்பு. 25

கலித்தொகை - மருதக் கலி 69

போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக,
ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர;
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெருவின்கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்
துணிந்தது பிறிதாக, துணிவிலள் இவள் என, 10
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயனில மொழிவாயோ;
பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்
நெஞ்சத்த பிறவாக, நிறையிலள் இவள் என,
வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ; 15
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய்
தருக்கிய பிறவாக, தன் இலள் இவள் என,
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ;
என ஆங்கு 20
தருக்கேம், பெரும! நின் நல்கல்; விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது,
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.

கலித்தொகை - மருதக் கலி 70

மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென,
கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை
மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி,
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி, 5
பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்:
நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே 10
அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம்
புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே
வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே 15
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தௌ? மணி வந்து எடுப்புமே;
என ஆங்கு
மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல், 20
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப்
பாணன் புகுதராக் கால்! 

கலித்தொகை - மருதக் கலி 71

விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர,
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி,
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள்
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார,
இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு, 5
நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல
பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத்
தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!
ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர் என உரைத்து,
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல் 10
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய;
மடுத்து அவன் புகுவழி மறையேன் என்று யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல்
அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண் 15
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய;
தணந்தனை எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல்
கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி,
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய; 20
என்று, நின்
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ!
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு,
ஆராத் துவலை அளித்தது போலும், நீ 25
ஓர் யாட்டு ஒரு கால் வரவு.

கலித்தொகை - மருதக் கலி 72

இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ,
சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல,
புது நீர புதல், ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க, 5
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி,
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்
வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!
கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழ,
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ 10
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,
மேல் நாள், நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை;
நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர்
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ
கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில், 15
ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை;
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல்
குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை; 20
என ஆங்கு
செறிவுற்றேம், எம்மை நீ செறிய; அறிவுற்று,
அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்ப;
கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே,
அழிந்து நிற் பேணிக் கொளலின் இழிந்ததோ 25
இந் நோய் உழத்தல் எமக்கு.

கலித்தொகை - மருதக் கலி 73

அகன் துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்,
தண் கமழ் நறுந் தேறல் உண்பவள் முகம் போல,
வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர! 5
நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல்வழி,
தீது இலேன் யான் எனத் தேற்றிய வருதிமன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்;
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி, 10
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதிமன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்;
என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி,
முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் 15
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள,
கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்;
என ஆங்கு
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும் 20
புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி; மற்று யாம்எனின்,
தோலாமோ, நின் பொய் மருண்டு.

கலித்தொகை - மருதக் கலி 74

பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,
மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம்,
கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! 5
அன்பு இலன், அறன் இலன், எனப்படான் என ஏத்தி,
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்;
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை
கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்;
முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து, 10
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;
என ஆங்கு
கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப்
பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது என,
ஊரவர் உடன் நகத் திரிதரும் 15
தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே.

கலித்தொகை - மருதக் கலி 75

நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,
சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,
ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி 5
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,
அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய்
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், 10
வதுவை நாளால் வைகலும், அஃது யான்
நோவேன், தோழி! நோவாய், நீ என
எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென:
எல்லினை வருதி; எவன் குறித்தனை? எனச்
சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென, 15
விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்;
வாடிய பூவொடு வாரல், எம் மனை? என
ஊடியிருப்பேனாயின், நீடாது,
அச்சு ஆறாக உணரிய வருபவன் 20
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்
பகல் ஆண்டு அல்கினை, பரத்த! என்று யான்
இகலியிருப்பேனாயின், தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் 25
ஆங்க
விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும்,
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,
அவ்அவ் இடத்தான் அவைஅவை காண 30
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவேன், தோழி! கடன் நமக்கு எனவே.

கலித்தொகை - மருதக் கலி 76

புனைஇழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,
அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும்,
நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர்
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ? என
வினவுதியாயின், விளங்கிழாய்! கேள், இனி: 5
செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய் என்று, அவன்
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்
ஒவ்வா என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை;
ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு, 10
நெடுங் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக்
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை;
வரி தேற்றாய், நீ என, வணங்கு இறை அவன் பற்றி,
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ 15
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல்
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை
என ஆங்கு,
அரிது இனி, ஆயிழாய்! அது தேற்றல்; புரிபு ஒருங்கு,
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, 20
தான் நயந்து இருந்தது இவ்வூர் ஆயின், எவன்கொலோ
நாம் செயற்பாலது, இனி.

கலித்தொகை - மருதக் கலி 77


இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும்
துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்;
திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்
அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல்,
தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி, 5
மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர்
அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:
தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக்
கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன்
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, நின் 10
பெண்டு எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்;
பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல;
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்; 15
மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்;
ஆங்க 20
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்,
இடையும், நிறையும் எளிதோ நிற் காணின்,
கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு.

கலித்தொகை - மருதக் கலி 78

பன் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி,
உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி
பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,
அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற் 5
பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப
இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு,
நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப்
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர! 10
நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து,
நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம் என்னும் தகையோதான்
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை;
சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் 15
தொடர் நீப்பின், தொகும், இவள் நலம் என்னும் தகையோதான்
அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை;
பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல், யான்
செலின் நந்தி, செறின் சாம்பும், இவள் என்னும் தகையோதான் 20
மூடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்
தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை;
ஆங்க,
ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ,
வெய்யாரும் வீழ்வாரும் வேறாக; கையின் 25
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,
தண் பனி வைகல் எமக்கு.

கலித்தொகை - மருதக் கலி 79

புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,
அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும் 5
தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி;
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்;
தோய்ந்தாரை அறிகுவேன், யான் என, கமழும் நின்
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ; 10
புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்;
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ;
கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி 15
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;
நண்ணியார்க் காட்டுவது இது என, கமழும் நின்
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ;
என ஆங்கு
பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி, 20
நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி;
ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான்
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

கலித்தொகை - மருதக் கலி 80

நயம் தலை மாறுவார் மாறுக; மாறா,
கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்,
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்ப, 5
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக! எம் பாக மகன்!
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் 10
தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே,
உளம் என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணுங்கால்;
ஐய! காமரு நோக்கினை, அத்தத்தா என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே, 15
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வ நோய் யாம் காணுங்கால்;
ஐய! திங்கட் குழவி, வருக! என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே,
நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் 20
அல்குல் வரி யாம் காணுங்கால்;
ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும்,
போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய 25
கோதை பரிபு ஆட; காண்கும்.

கலித்தொகை - மருதக் கலி 81

மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர,
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்,
நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் 5
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப,
பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்
கால் வல் தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா,
ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்
போல, வரும் என் உயிர்! 10
பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்,
பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற,
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா,
பெருந்தகாய்! கூறு, சில; 15
எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே
வாய் ஓடி, ஏனாதிப்பாடியம் என்றற்றா,
நோய் நாம் தணிக்கும் மருந்து எனப் பாராட்ட,
ஓவாது அடுத்து அடுத்து, அத்தத்தா! என்பான் மாண
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று, இவன் 20
வாயுள்ளின் போகான்அரோ;
உள்ளி உழையே ஒருங்கு படை விடக்
கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை
எள்ளுமார் வந்தாரே, ஈங்கு
ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர் 25
கள்வரைக் காணாது, கண்டேம் என்பார் போல,
சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின்
ஆணை கடக்கிற்பார் யார்;
அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல்,
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி 30
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர் வளி நின்றாய்; நீ செல்
இனி, எல்லா! யாம் தீதிலேம் என்று தெளிப்பவும், கைந்நீவி
யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின்,
மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம், 35
தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும்
ஆ போல் படர் தக, நாம்.

கலித்தொகை - மருதக் கலி 82

ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு,
காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை
பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை;
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க வழி எல்லாம் கூறு; 5
கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்
காயாமை வேண்டுவல், யான்!
காயேம்.
மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்
அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற 10
தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும்
மருப்புப் பூண் கையுறையாக அணிந்து,
பெருமான், நகைமுகம் காட்டு! என்பாள் கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,
வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும் 15
மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,
முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,
நினக்கு யாம் யாரேம் ஆகுதும்? என்று,
வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,
ஆங்கே, அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் 20
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள்;
அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித்
தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு
கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா! 25
வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்
பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,
தொடியும் உகிரும் படையாக நுந்தை
கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,
வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி; 30
அன்ன பிறவும், பெருமான் அவள்வயின்
துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;
அமைந்தது, இனி நின் தொழில். 35

கலித்தொகை - மருதக் கலி 83

பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை,
பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர,
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
விளையாட்டிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய்,
உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம் 5
நீட்டித்த காரணம் என்?
கேட்டீ,
பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்
குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கி, தளரும்
பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண், 10
அகல் நகர் மீள்தருவானாக, புரி ஞெகிழ்பு
நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்,
சாலகத்து ஒல்கிய கண்ணர், உயர் சீர்த்தி
ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்
கால்கோள் என்று ஊக்கி, கதுமென நோக்கி, 15
திருந்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்,
கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு
ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்
செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்! 20
நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த
புலம்பு எலாம் தீர்க்குவேம் மன் என்று இரங்குபு,
வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத
கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி,
ஒள்ளிழாய்! யான் தீது இலேன் 25
எள்ளலான், அம் மென் பணைத் தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
எம் இல் வருதியோ? எல்லா! நீ தன் மெய்க்கண்
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,
முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை
வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு 30
தந்தையும் வந்து நிலை.

கலித்தொகை - மருதக் கலி 84

உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய,
கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்
சுரந்த என் மென் முலைப் பால் பழுதாக நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான், எல்லா! 5
கடவுட் கடி நகர்தோறும் இவனை
வலம் கொளீஇ வா என, சென்றாய் விலங்கினை
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை? கூறு;
நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போதுபோல் கொண்ட 10
குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ,
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல்நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர் 15
தம்தம் கலங்களுள், கையுறை என்று இவற்கு,
ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார் பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம், இஃது ஒத்தன்; சீத்தை,
செறு தக்கான் மன்ற பெரிது;
சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட, 20
மோதிரம் யாவோ; யாம் காண்கு;
அவற்றுள், நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்
குறி அறிந்தேன்; காமன் கொடி எழுதி, என்றும்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில் 25
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை
அறீஇய செய்த வினை;
அன்னையோ? இஃது ஒன்று
முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர்,
வெந்த புண் வேல் எறிந்தற்றா, இஃது ஒன்று 30
தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்கண்
தந்தார் யார், எல்லாஅ! இது;
இஃது ஒன்று என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி, தந்தாளா நின்னை,
இது தொடுக என்றவர் யார்; 35
அஞ்சாதி; நீயும் தவறிலை; நின் கை இது தந்த
பூ எழில் உண்கண் அவளும் தவறிலள்;
வேனிற் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?
மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள்
தான் யாரோ? என்று வினவிய நோய்ப்பாலேன் 40
யானே தவறுடையேன்!

கலித்தொகை - மருதக் கலி 85

காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு
பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி
உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொலங் காழ்; மேல்
மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல்
தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை; 5
கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி;
பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த,
பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின் 10
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்;
சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல்
சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக,
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண, 15
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை;
ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின்
செல்வு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப்
பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி
நோதலும் உண்டு; ஈங்கு என் கை வந்தீ, 20
செம்மால்! நின் பால் உண்ணிய;
பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்
நுந்தைபால் உண்டி, சில; 25
நுந்தை வாய் மாயச் சூள் தேறி, மயங்கு நோய் கைமிக,
பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா
ஞாயர்பால் உண்டி, சில;
அன்னையோ! யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத்
தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை 30
வருக என்றார், யார்கொலோ, ஈங்கு;
என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி; உண்டீத்தை; என்
பாராட்டைப்பாலோ சில;
செருக் குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்
வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை 35
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.

கலித்தொகை - மருதக் கலி 86

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,
கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ,
பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய்
கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல் 5
பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப,
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,
தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த
தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்
போர் யானை, வந்தீக, ஈங்கு! 10
செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை
நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;
கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்
வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை, நுந்தை போல், 15
மென் தோள் நெகிழ விடல்;
பால் கொளல் இன்றி, பகல் போல், முறைக்கு ஒல்காக்
கோல் செம்மை ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,
கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தைபோல்,
சால்பு ஆய்ந்தார் சாய விடல்; 20
வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு
ஈதல்மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,
மாதர் மென் நோக்கின் மகளிரை, நுந்தைபோல்,
நோய் கூர நோக்காய் விடல்;
ஆங்க, 25
திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்
மகன் அல்லான் பெற்ற மகன்;
மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர்
ஆயிழாய்! தாவாத எற்குத் தவறு உண்டோ ? காவாது ஈங்கு
ஈத்தை, இவனை யாம் கோடற்கு சீத்தை; யாம் 30
கன்றி அதனைக் கடியவும், கை நீவி,
குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு,
தந்தை வியன் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பிலி பெற்ற மகன்.

கலித்தொகை - மருதக் கலி 87

ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை
வெரூஉதும், காணுங்கடை;
தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய்,
மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு,
ஏடா! நினக்குத் தவறு உண்டோ ? நீ வீடு பெற்றாய்; 5
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;
நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப்
புலப்பார் உடையர், தவறு;
அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி;
காயும் தவறு இலேன் யான்; 10
மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது
நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின்
ஊடுதல் என்னோ, இனி;
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் 15
பாடு இல் கண் பாயல் கொள.

கலித்தொகை - மருதக் கலி 88

ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக,
தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு
அடியரோ ஆற்றாதவர்;
கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று; 5
வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம், மருள்வாரகத்து;
ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா
என்கண் எவனோ, தவறு;
இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல், 10
வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,
தவறாதல் சாலாவோ? கூறு;
அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை 15
தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு;
இனித் தேற்றேம் யாம்,
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி,
நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி 20
யார் மேல்? விளியுமோ? கூறு.

கலித்தொகை - மருதக் கலி 89

யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை
வாரல்; நீ வந்தாங்கே மாறு;
என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் 5
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது;
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!
பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து;
மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ ? நீ நயந்த, 10
இன்னகை! தீதோ இலேன்;
மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர்
புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு!

கலித்தொகை - மருதக் கலி 90

கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,
மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்
பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு;
ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?
கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, 5
பாடு பெயல் நின்ற பானாள் இரவில்
தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,
வடிவு ஆர் குழையும், இறையும், பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா,
ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் 10
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?
ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?
மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில் 15
நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ?
தேறு நீ; தீயேன் அலேன் என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ?
கூறு இனி; காயேமோ, யாம்;
தேறின், பிறவும் தவறு இலேன் யான்; 20
அல்கல் கனவுகொல் நீ கண்டது;
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு என, காணாது, மாறு உற்று
பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா!
நின்றாய்; நின் புக்கில் பல 25
மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு
ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுகுமோ,
யாழ நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்.

 
மேலும் கலித்தொகை »
temple news
150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. ... மேலும்
 
கலித்தொகை - 1. கடவுள்வாழ்த்து ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் ... மேலும்
 
கலித்தொகை - மருதக் கலி 91 அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்ததெரி ... மேலும்
 
கலித்தொகை - முல்லைக் கலி 111 தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar