Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகநானூறு (பகுதி-1) அகநானூறு (பகுதி-3)
முதல் பக்கம் » அகநானூறு
அகநானூறு (பகுதி-2)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
05:03

அகநானூறு - 41. பாலை

வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,  5
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
 நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,  10
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய,  15
நுண் பல் தித்தி, மாஅயோளே?  

தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார்

அகநானூறு - 42. குறிஞ்சி

மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,  5
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,  10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே  

தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர்

அகநானூறு - 43. பாலை

கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,  5
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,  10
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர்தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
இன் துணைப் பிரியும் மடமையோரே!  15

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரையாசிரியர் நல்லந்துவனார்

அகநானூறு - 44. முல்லை

வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,  5
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,  10
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,  15
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!  

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார்

அகநானூறு - 45 . பாலை

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்  5
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,  10
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,  15
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!  

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

அகநானூறு - 46. மருதம்

சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை  5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்  10
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;  15
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?  

வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார்

அகநானூறு - 47. பாலை

அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி  5
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,  10
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
யாண்டு உளர்கொல்? எனக் கலிழ்வோள் எய்தி,
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்  15
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள், பாயும்
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.  

தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்

அகநானூறு - 48. குறிஞ்சி

அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள் என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
 5

ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
புலி புலி! என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
 10
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
யாதோ, மற்று அம் மா திறம் படர்? என
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,  15
நாணி நின்றனெமாக, பேணி,
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ? என்றனன். பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,  20
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன் மறை தேஎம் நோக்கி, மற்று இவன்
மகனே தோழி! என்றனள்.  25
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.  

செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால் முடக் கொற்றனார்

அகநானூறு - 49. பாலை

கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர் என,
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,  5
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ!
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,  10
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,  15
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே!  

உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்

அகநானூறு - 50. நெய்தல்

கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
பகலும் நம்வயின் அகலானாகிப்  5
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
வாராதோர் நமக்கு யாஅர்? என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று,
சொல்லின் எவனோ பாண! எல்லி  10
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண் என,
கண் நிறை நீர் கொடு கரக்கும்,
ஒண் நுதல் அரிவை, யான் என்செய்கோ? எனவே.  

தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார்

அகநானூறு - 51. பாலை

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி  5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,  10
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தௌர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.  

பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார்

அகநானூறு - 52. குறிஞ்சி

வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
 "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்  5
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்? என  10
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
சேர்ந்தன்று வாழி, தோழி! யாக்கை
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய் எனச் செப்பாதீமே.  15

தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,அறத்தொடு நிற்றும் என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார்

அகநானூறு - 53. பாலை

அறியாய், வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,  5
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்  10
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்;  15
அருளே காதலர் என்றி, நீயே.  

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்

அகநானூறு - 54. முல்லை

விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற்
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,  5
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்  10
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனை நகு மாலை,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர்  15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவைஆயின், தருகுவென் பால் என,
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி,  20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.  

வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

அகநானூறு - 55 . பாலை

காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்,
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
 5
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்  10
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்  15
காதல் வேண்டி, எற் துறந்து
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.  

புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்

அகநானூறு - 56. மருதம்

நகை ஆகின்றே தோழி! நெருநல்
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய  5
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்  10
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
இம் மனை அன்று; அஃது உம் மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி,  15
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.  

பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

அகநானூறு - 57. பாலை

சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்  5
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
யாமே எமியம்ஆக, தாமே  10
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி,  15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
பானாட் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?  

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர்

அகநானூறு - 58. குறிஞ்சி

இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,  5
கூதிர், இல் செறியும் குன்ற நாட!
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்  10
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.  

சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்

அகநானூறு - 59. பாலை

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்  5
மரம் செல மிதித்த மாஅல் போல,
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி!
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,  10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்  15
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன்

அகநானூறு - 60. நெய்தல்

பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,  5
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,  10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.  15

தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார்

அகநானூறு - 61. பாலை

நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர் எனத்
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து
ஆழல் வாழி, தோழி! தாழாது,  5
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்  10
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி  15
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.  

தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 62. குறிஞ்சி

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு  5
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல,  10
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே வென் வேற்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்,  15
மடவது மாண்ட மாஅயோளே.  

அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

அகநானூறு - 63. பாலை

கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி  5
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,  10
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
கறவை தந்த கடுங் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை  15
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்கொல்? எனக் கலுழும் என் நெஞ்சே.  

தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார்

அகநானூறு - 64. முல்லை

களையும் இடனால் பாக! உளை அணி
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்  5
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின்,
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி,  10
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை  15
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.  

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்

அகநானூறு - 65 . பாலை

உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
 5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,  10
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,  15
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; பணைத் தோள்,
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே!  20

வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 66. மருதம்

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
 5

வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
 10
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங் கண் புதல்வனை நோக்கி, நெடுந் தேர்
தாங்குமதி, வலவ! என்று இழிந்தனன். தாங்காது,
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
புல்லி, பெரும! செல் இனி, அகத்து எனக்  15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம் என, மகனொடு
தானே புகுதந்தோனே; யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, இவற்
கஇலக்கினன் போலும், இக் கொடியோன் எனச் சென்று  20
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழங் கணோட்டமும் நலிய,  25
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே  

பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

அகநானூறு - 67. பாலை

யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,  5
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்  10
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
உரு இல் பேஎய் ஊராத் தேரொடு  15
நிலம் படு மின்மினி போல, பல உடன்
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!  

பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார்

அகநானூறு - 68. குறிஞ்சி

அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
 5
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
பின்னும் கேட்டியோ? எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்  10
வருவர்ஆயின், பருவம் இது எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத்  15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப்  20
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.  

தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார்

அகநானூறு - 69. பாலை

ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
 5
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்  10
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்  15
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலை நாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.  20

பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன் எனக் கவன்ற தலைமகட்கு, வருவர் என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்

அகநானூறு - 70. நெய்தல்

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே  5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்  10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த  15
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.  

தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

அகநானூறு - 71. பாலை

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருள, பையென  5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,  10
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,  15
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?  

பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார்

அகநானூறு - 72. குறிஞ்சி

இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை  5

இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
அஞ்சுவம் தமியம் என்னாது, மஞ்சு சுமந்து,
 10
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்  15
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்  20
ஆனா அரும் படர் செய்த
யானே, தோழி! தவறு உடையேனே.  

தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார்

அகநானூறு - 73. பாலை

பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,  5
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
என் ஆகுவள்கொல், அளியள்தான்? என,
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது  10
காணிய வம்மோ காதல்அம் தோழி!
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி  15
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
சென்ற தேஎத்து நின்றதால், மழையே.  

தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார்

அகநானூறு - 74. முல்லை

வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,  5
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், நின் நினைந்து  10
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி என,
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற்  15
கல்லாக் கோவலர் ஊதும்
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!  

தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார்

அகநானூறு - 75 . பாலை

"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,  5
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய்,  10
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்  15
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்? என-
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி  20
ஆனா நோயை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?  

பொருள்வயிற் பிரிவர் என வேறுபட்ட தலைமகட்கு, பிரியார்எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார்

அகநானூறு - 75 . பாலை

"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,  5
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய்,  10
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்  15
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்? என-
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி  20
ஆனா நோயை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?  

பொருள்வயிற் பிரிவர் என வேறுபட்ட தலைமகட்கு, பிரியார்எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார்

அகநானூறு - 76. மருதம்

மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,  5
கழறுப என்ப, அவன் பெண்டிர்; அந்தில்,
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
ஆதிமந்தி பேதுற்று இனைய,  10
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல,
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.  

தலைமகனை நயப்பித்துக் கொண்டாள் என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர்

அகநானூறு - 77. பாலை

நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
 5
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,  10
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,  15
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.  

தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார்

அகநானூறு - 78. குறிஞ்சி

நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
 5
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,  10
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
என் ஆகுவர்கொல் அளியர்தாம்? என,
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை  15
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,  20
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?  25

களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார்

அகநானூறு - 79. பாலை

தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன் புலம் துமியப் போகி, கொங்கர்  5
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
வல்லாங்கு வருதும் என்னாது, அல்குவர  10
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,  15
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.  

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

அகநானூறு - 80. நெய்தல்

கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த  5
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,  10
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந் தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.  

இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்

 
மேலும் அகநானூறு »
temple news
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் ... மேலும்
 
அகநானூறு - பாயிரம்  நின்ற நீதி, வென்ற நேமி,பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,அறிவு வீற்றிருந்த செறிவுடை ... மேலும்
 
அகநானூறு - 81. பாலை நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,புல் அளைப் ... மேலும்
 
அகநானூறு - 121. பாலை நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,வறுமை கூரிய மண் ... மேலும்
 
அகநானூறு - 161. பாலை வினைவயிற் பிரிதல் யாவது? வணர் சுரிவடியாப் பித்தை, வன்கண், ஆடவர்அடி அமை பகழி ஆர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar