பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (மார்ச் 29) நடக்கிறது.மார்ச் 17ல் இத்திருவிழா துவங்கியது. நேற்று சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சைகுதிரை வாகனத்தில் எழுந்தருளினர். பின், கிரிவீதியில் பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்து, கீழத்தெருவில், கிராமத்தினர் சார்பில் பச்சை குதிரைக்கு களி கொடுக்கும் நிகழச்சி முடிந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.இரவு 7 மணிக்கு கோயில் திருவாட்சி மண்டபத்திலுள்ள ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடந்தது. இன்று மதியம் 12.45 முதல் 1 மணிக்குள், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில், ஆறுகால் பீடத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.இரவு 7 மணிக்கு, பூ பல்லக்கில் தெய்வானையும், வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும் எழுந்தருளி, 16 கால் மண்டபம் முன்பு பெற்றோரிடம் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து, வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். நாளை(மார்ச்30) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.