பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
திருக்கழுக்குன்றம்: சீர்குலைந்து வரும் ஆனூர், அர்த்தபுரீஸ்வரர் கோவிலை பராமரிக்க, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருக்கழுக்குன்றம், ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனூர் ஊராட்சியில், 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சவுந்திரநாயகி உடனுறை அர்த்தபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கடந்த 1967ம் ஆண்டு முதல் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.போதிய பராமரிப்பு இல்லாததால், பிரசித்தி பெற்ற இக்கோவில், பாழடைந்து, சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கோவிலை சீரமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரி உள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறியதாவது: இப்பகுதியில் அமைந்துள்ள ஒரே சிவன் கோவில் இதுதான். இக்கோவிலை, மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பல்லவ மன்னர்கள் பராமரித்து, பல்வேறு தானங்களை அளித்து, வழிபட்டு வந்துள்ளனர். கடந்த, 1933ம் ஆண்டு இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அர்த்தபுரீஸ்வரர் கோவிலுக்கு, 55 ஹெக்டேர் நிலம் சொந்தமாக உள்ளது. இருப்பினும், அன்றாட வழிபாடுகள் கூட நடத்தப்படுவதில்லை. பெரும்பாலும், கோவிலை பூட்டியே வைத்துள்ளனர். கோவிலின் சொத்துக்களை குத்தகைக்குவிட்டு, பணம் வசூலிக்கும் அறநிலையத் துறை, கோவிலின் வழிபாட்டில் கவனம் செலுத்துவதில்லை. மேலும், சிதிலமடைந்து வருவதையும் கண்டு கொள்ளவில்லை. இதனால், கோவிலில், அமைந்துள்ள கொடிமரம் முதல் நந்தி மண்டபம், சுற்று சுவர் மற்றும் மூலஸ்தான கோபுரங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. புராதன சிலைகள், சமூக விரோதிகளால் திருடப்பட்டு வருகின்றன. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மேலும், தினசரி வழிபாட்டிற்கும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.