காளையார்கோவில்: கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா,கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து,தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை 4.30 மணிக்கு தேருக்கு எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்து, 9.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.இன்று இரவு அம்மன் மலர் பல்லக்கில் வலம் வந்து ,தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து பால்குடம், சந்தனகுடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா,செயல் அலுவலர் இளையராஜா,கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.