பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை, சித்திரை மற்றும் ஆடி வீதிகளில் காண, நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. உலகப்புகழ் பெற்ற, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், ஏப்., 23ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு முன்பு இலவச பாஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி, இலவச பாஸ் ரத்து செய்யப்பட்டது. அதற்குப்பதிலாக "திருக்கல்யாண கட்டண பாஸ் ஒன்றுக்கு, 200 ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. திருக்கல்யாண விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையில் நாளை (ஏப்ரல் 3) நடக்கிறது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஆடி வீதிகளில், "ஏசி வசதி செய்யப்படவுள்ளது. அம்மன், சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் திருமண மேடை அலங்காரம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. திருக்கல்யாண விருந்து, அறுசுவையுடன் வழங்க கோவில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அளவு கோவில் பிரசாதம் வழங்கப்படவுள்ளது. கோவில் பாதுகாப்பு கருதி கேமரா, மொபைல் போன்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருக்கல்யாணத்தை அனைவரும் கண்டு களிக்க வசதியாக, ஆடி வீதிகளில் எட்டு இடங்களிலும், சித்திரை வீதிகளில் எட்டு இடங்களிலும், மெகா எல்.சி.டி., "டிவிக்கள் வைக்கப்படவுள்ளன. இதன் மூலம் திருக்கல்யாணத்தின் நேரடி ஒளிபரப்பை, சித்திரை மற்றும் ஆடி வீதிகளில் காண முடியும்.