பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
10:04
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே மழை வேண்டியும், வறட்சியை விரட்டவும், மழைச்சோறு சேகரித்து, கோவிலில் நூதன வழிபாட்டை மக்கள் நடத்தினர்.கோபி அருகே ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, விவசாயமே பிரதான தொழில். சில ஆண்டாக, பருவமழை பொய்த்ததால், ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.அப்பகுதிகளில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது.எனவே, மழை வேண்டி மழைசோறு சேகரித்து, இறைவனுக்கு படைத்து நூதன வழிபாட்டை, கிராம மக்கள் நடத்தினர். நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி, வீடு, வீடாக சென்று, கலயங்களில் பழையசோறு, கஞ்சிகளை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட மழைச்சோற்றை, மேளதாளத்துடன், கஞ்சி பானையில் சுமந்தபடி, விநாயகர், மாரியம்மன் கோவில்களில் வைத்து வழிபட்டனர்.வழிபாடு முடிந்த பின், சேகரிக்கப்பட்ட பழைய கஞ்சிசோற்றை, விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர் கமிட்டி தலைவர் ஆண்டவர், செயலாளர் சதாசிவம், பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் கூறியதாவது:கடந்த பத்து ஆண்டுக்கு முன், ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு பகுதியில் வறட்சி நிலவியதால், மழைச்சோறு சேகரித்து மக்கள் வழிபட்டனர். சில தினத்திலேயே, மழை வந்ததால், தற்போதும் ஏற்பட்ட வறட்சியை விரட்ட, மழைச்சோறு சேகரித்து வழிபாடு நடத்தினோம்.வழிபாட்டின்போது, சுவாமி ஆடிய இரு சிறுமிகள், "இருதினத்தில் மழை வரும், என, வாக்கு தெரிவித்தனர். எனவே, ஓரிரு தினத்தில் மழை வரும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.