திண்டுக்கல்: அபிராமி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் உட்பட ஐந்து கோபுரங்களை அமைக்க திருப்பணிக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கப்பட்டு கட்டட பணிக்காக கிழக்கு பகுதியில் உள்ள கடைகள் அகற்றப்பட்டுள்ளன. ஸ்ரீருத்ரயாகம், பாலாலயத்திற்கு பின்பு கோயிலில் உள்ள சிலைகள் அருகில் உள்ள சிருங்கேரி மடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வெள்ளை விநாயகர் கோயில் எதிரில் உள்ள காசியா பிள்ளை பேட்டையில் தற்காலிக கோயில் அமைக்கப்பட்டு அத்தி மரத்திலான சிலைகளுக்கு நித்ய கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கோயிலின் உட் பிரகாரத்தில் இடம்பெற வேண்டிய அலுவலக அறைகள், மடப்பள்ளி போன்றவற்றை அமைப்பதற்கான இடங்களை திருப்பணிக்குழுவின் தலைவர் வேலுச்சாமி பார்வையிட்டு அவற்றிற்கான அளவீடுகளை இறுதிசெய்தார். இதுவரை மூன்று கோபுரங்களுடன் செயல்பட்டு வந்த அபிராமி அம்மன் கோயிலின் வடிவமைப்பை மாற்றி ராஜகோபுரத்துடன் 5 கோபுரங்களை நிர்மாணிக்க ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலின் தலைமை பட்டர் ராஜா தலைமையில் வேதவிற்பனர்கள் கோபுரங்களுக்கான இடம் அமையும் பகுதிகள் ஆகம விதிகளின்படி அமைந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். திருப்பணிக்குழுவின் தலைவர் வேலுசாமி கூறியதாவது: புதிய கோபுரங்களை நிர்மாணிப்பதற்காக தலை சிறந்த சிற்பிகள் மற்றும் கட்டட கலையின் தொழில் நுட்ப வல்லுநர்கள் தேர்வு நடந்து வருகிறது. இது தவிர இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களை பார்வையிட்டு அவற்றின் கலை நுணுக்கங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளோம். கட்டட பணி விரைவில் துவங்கப்படும், என்றார்.