பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
10:04
நகரி: வெங்கடேச பெருமாள் கோவிலில், இரவு நேர வி.ஐ.பி., தரிசன அனுமதியை ரத்து செய்ய, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருமலையில் காலை மற்றும் இரவு நேரங்களில், முக்கிய பிரமுகர்களுக்கும், சிபாரிசு கடிதம் பெற்று வருவோருக்கும், 500 ரூபாய்க்கு, வி.ஐ.பி., தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. தினமும், 1,000 முதல் 2,500 வி.ஐ.பி., தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இவர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கும் போது, ஆர்ஜித சேவை, 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், 50 ரூபாய் கட்டண தரிசனம், இலவச தரிசனம் நிறுத்தப்பட்டு, வி.ஐ.பிக்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக, மற்ற வரிசையில் உள்ளோர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தடுத்து நிறுத்தப்படுகின்றனர். வி.ஐ.பி.,க்களால் சாதாரண பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், இனி வாரத்தில் வியாழக்கிழமை இரவு தவிர மற்ற நாட்களில், இரவு நேர வி.ஐ.பி., தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் முன்னிலையில் நடந்த, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வார நாட்களில், வியாழனன்று மூலவருக்கு பூலங்கி சேவை (புஷ்ப அலங்காரம்) நடத்தப்படுகிறது. இந்த சேவையில் கலந்து கொள்ள, ஏராளமான வி.ஐ.பி., க்கள் விரும்புவதால், இந்த சேவையை ஒட்டி வியாழன் இரவு மட்டும், வி ஐ.பி., தரிசனத்திற்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.