பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
10:04
திருப்பூர்: திருப்பூரில், அம்மை நோய் தாக்குதல் குறையவும், மழை பெய்து, வெப்பம் தணிய வேண்டியும், நேற்று ஊர் மறித்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம், அருள்ஜோதி நகரில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், பழங்காலத்தில் வழிபடுவதைபோல், அம்மை நோய் தாக்குதல் குறையவும், வெப்பம் தணிந்து மழை பெய்யவும், மாரியம்மனை வேண்டும் வகையில், பெண்கள் நேற்று ஒன்று கூடி, ஊர் மறித்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பானையில் பொங்கல் வைத்து, வேப்பிலை கட்டி, குளிர்ச்சியை அளிக்கும் பானகம், துள்ளுமாவு, இளநீர், நீர் மோர் உள்ளிட்டவை படைத்து வழிபட்டனர். பெண்கள் கூறுகையில், "அருள்ஜோதி நகர் பகுதியில், 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, அடுத்தடுத்து அம்மை நோய் தாக்கியது. அதனால் வெம்மை குறைந்து, அம்மையின் தாக்கம் குறையவும், மழை பெய்யவும், மாரியம்மனை வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது, என்றனர்.